சுங்கத்துறை எச்சரிக்கை..!!! வரிகளை தவிர்க்க முயன்றால் கடும் நடவடிக்கை..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில், நிலம்,கடல் மற்றும் வான் சோதனைச் சாவடிகள் வழியாக நாட்டிற்குள் நுழையும் போது நுகர்வு வரி மற்றும் சுங்க வரிகளுக்கு உட்பட்ட பொருட்களை அறிவிக்கத் தவறியதாக மொத்தம் 23,742 பயணிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து மொத்தமாக S$7.11 மில்லியன் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இது கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 10,000 பேருக்கு மேல் அதிகரித்துள்ளது.
சிங்கப்பூர் சுங்கத் துறை வெளியிட்ட தகவலின்படி, 2024 மற்றும் 2023 ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் முறையே 13,099 மற்றும் 7,139 பேர் விதிகளை மீறியதாகவும், அவர்களிடம் S$3.47 மில்லியன் மற்றும் S$2.30 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல்,பொருட்களை முழுமையாக அல்லது துல்லியமாக அறிவிக்காததற்காக இந்த ஆண்டில் மட்டும் 142 பேருக்கு S$5,000 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது மூன்று மடங்கு அதிகமாகும்.
அறிவிக்கப்படாமல் கொண்டு வரப்படும் பொருட்களில் ஆடைகள், கைக்கடிகாரங்கள், மொபைல் போன்கள், பைகள், சிகரெட்டுகள், மதுபானங்கள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் சுகாதார உணவுகள் போன்றவை அடங்கும்.
சுங்கத்துறை அனைத்து பயணிகளிடமும் நாட்டிற்குள் நுழையும் போது தங்களிடம் உள்ள பொருட்களை முறையாக அறிவித்து, அதற்குரிய வரிகளை செலுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
இதற்காக Customs@SG பயன்பாட்டின் மூலம் ஆன்லைன் அறிவிப்புகளைச் செய்யலாம்.
சட்டத்தின்படி, வரி ஏய்ப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, தவிர்க்கப்பட்ட வரி தொகையின் 20 மடங்குவரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.