இரவு நேரத்தில் உலாவியவர்கள் ஜாம்பியா?? மனிதர்களா? பீதியடைந்த மக்கள்!!
சிங்கப்பூரில் “ஜாம்பி கார்ட்ரிட்ஜ்கள்” என்று அழைக்கப்படும் மின்னணு சிகரெட்டுகளைப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நான்கு இளைஞர்கள் பொங்கோலில் இரவு நேரத்தில் இறந்தவர்கள் போல் நடந்து கொண்ட வீடியோ SgFollowsAll என்ற சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
அவர்களில் சிலர் தங்கள் உடலை ஆட்டியபடியும் சிலர் தரையில் விழுந்து கிடந்ததையும் அந்த வீடியோவில் காணலாம்.
அவர்களின் செயல் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
இது குறித்த வீடியோ ஜூன் 24 ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டது.
பொங்கோல் டவுன் சதுக்கத்தில் நான்கு இளைஞர்கள் நடந்து கொண்ட விதத்தை பொதுமக்களில் ஒருவர் வீடியோ எடுத்தார்.அந்த இளைஞர்களில் மூவர் தடுமாறி மயக்கமடைந்து கிடந்ததாகவும் ,மீதமுள்ள ஒருவர் தரையில் சாய்ந்து படுத்து கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
காவல்துறைக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டது.இதனை அடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டனர்.
அவர்கள் “KPods” எனும் இ-சிகரெட்டை புகைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அதில் எட்டோமைடேட் எனும் போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.அது வாந்தி,குமட்டல்,தனிச்சையான தசை அசைவுகள் அல்லது பிடிப்புகள்,சுவாசம் மற்றும் இரத்த அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள்,அது மட்டும் இல்லாமல் வலிப்பு ,மனக் குழப்பங்களை ஏற்படுத்தும் என்றும் அது உடல்நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் இ-சிகரெட்டுகளை வாங்குவது,வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
அதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.எட்டோமைடேட் கொண்ட இ-சிகரெட்டுகளை வைத்திருப்பது அல்லது பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.அபராதம் விதிக்கப்படலாம்.அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படலாம்.