சிங்கப்பூரில் அடுத்தடுத்து மூடப்படும் விளையாட்டு நிலையங்கள்…!!

சிங்கப்பூரில் அடுத்தடுத்து மூடப்படும் விளையாட்டு நிலையங்கள்...!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் காலாங் பேசின் நீச்சல் வளாகம் மற்றும் செயின்ட் வில்ஃபிரெட் விளையாட்டு மையம் இரண்டும் இந்த ஆண்டு (2025) இறுதியில் குத்தகை காலம் முடிந்த பிறகு மூடப்படும்.

இந்த அறிவிப்பு, ஸ்போர்ட் சிங்கப்பூர் (ஸ்போர்ட்எஸ்ஜி), வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (எச்டிசி) மற்றும் நகர்ப்புற மறுசீரமைப்பு ஆணையம் ஆகியவை வெள்ளிக்கிழமை
(ஜூன் 13) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

எண் 21 கேலாங் பாரு பாதையில் அமைந்துள்ள காலாங் பேசின் நீச்சல் வளாகம் செப்டம்பர் 1 ஆம் தேதி மூடப்படும் என்றும், வாம்போவா பகுதியில் அமைந்துள்ள செயிண்ட் வில்ஃபிரெட் விளையாட்டு மையம் அக்டோபர் 1 ஆம் தேதி மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காலாங் பேசின் வளாகத்தில் ஒரு உடற்பயிற்சி கூடம் உள்ளது. செயிண்ட் வில்ஃபிரெட் விளையாட்டு மையத்தில் டென்னிஸ் மற்றும் ஸ்குவாஷ் மைதானங்கள் மற்றும் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது,

இரண்டு வளாகங்களும் மூடப்பட்டதைத் தொடர்ந்து, பொது வீட்டுவசதிக்காக நிலத்தை மறுவடிவமைப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக கூட்டு அறிக்கை தெரிவித்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் தீவிரமடைந்துள்ள வீட்டுவசதி தேவையை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இது இருப்பதாக கூட்டு அறிக்கை குறிப்பிட்டது.

மேலும் இதற்கு பதிலாக பொதுமக்கள் சிராங்கூன், கேலாங் ஈஸ்ட், ஜாலான் புசார் ஆகியவற்றில் உள்ள ‘ஆக்டிவ்எஸ்ஜி’ நீச்சல் குளங்கள், காலாங் ‘ஆக்டிவ்எஸ்ஜி’ ஸ்குவாஷ் நிலையத்திலுள்ள டென்னிஸ், ஸ்குவாஷ் திடல்கள் போன்றவற்றை நாடலாம்.

இரு-பயன்பாட்டு முறையின்கீழ், பெண்டிமியர் தொடக்கப்பள்ளியின் உள்ளரங்க விளையாட்டு வசதி, பெண்டிமியர் உயர்நிலைப் பள்ளியின் காற்பந்துத் திடல் ஆகியவற்றையும் பொதுமக்கள் பயன்படுத்த முடியும்.

அரசாங்கத்தின் ‘விளையாட்டு வசதிகள் பெருந்திட்டத்தின்’ ஓர் அங்கமாக பொதுமக்கள் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஸ்போர்ட்ஸ்எஸ்ஜி அமைப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று கூட்டறிக்கை தெரிவித்தது.