சிங்கப்பூர்: இந்தோனேசியாவின் பாலியில் புதன்கிழமை (ஜூன் 18) நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் சிங்கப்பூரின் ஜூலியட் ஹெங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
உலகத் தரவரிசையில் 93-வது இடத்தில் உள்ள ஹெங், இறுதிப் போட்டியில் ஜப்பானின் உலகத் தரவரிசையில் இரண்டாம் நிலை வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான மிசாகி எமுராவிடம் 7-15 என்ற கணக்கில் தோல்வியடைந்தாலும்,ஹெங் தனக்கான இடத்தை பதிவு செய்தார்.
தொடக்க பூல் சுற்றுக்குப் பிறகு, 20 வயதான அவர் சகநாட்டவர் ஜெர்மைன் டானையும், பின்னர் கஜகஸ்தானின் டாட்டியானா பிரிகோட்கோவையும் வீழ்த்தினார்.
பின்னர் உலகத் தரவரிசையில் 26 வது இடத்தில் உள்ள ஜப்பானின் செரி ஓசாக்கியை 15-8 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
பின்னர் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 18 வது இடத்தில் உள்ள உஸ்பெகிஸ்தானின் சயனாப் தயிபெகோவாவை 15-14 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
அரையிறுதியில் உலகத் தரவரிசையில் 20 வது இடத்தில் உள்ள தென் கொரியாவின் கிம் ஜியோங்மியை வீழ்த்தி ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் சிங்கப்பூர் வாள்வீச்சு வீரரானார்.
இறுதிப் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹெங்,தான் இன்னும் “அதிர்ச்சியில்” இருப்பதாகக் கூறினார்.
“நான் இவ்வளவு தூரம் சாதித்ததை இன்னும் என்னால் உணர முடியவில்லை,”என்று அவர் கூறினார். “இது ஒரு மரியாதை, எல்லோரும் எனக்குள் ஊற்றிய முயற்சிக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நான் அவர்களை ஏமாற்றவில்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.”
“இந்த பதக்கம் ஒருவரின் முயற்சி மட்டுமல்ல, இது ஒரு கூட்டு முயற்சியாகும் ”என்று கூறினார்.
மேலும் ஹெங் தனது பயிற்சியாளர் கிம் சியுங்ஜுன், சிங்கப்பூர் அணியின் மற்ற உறுப்பினர்கள் மற்றும் தனது சொந்த நாட்டிலுள்ள தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.