மாற்று விகித மோசடி..!!! இரண்டு சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு கடும் அபராதம்...!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் போட்டிச் சட்டங்களை மீறி, சட்டவிரோதமாக RMB (சீன யுவான்) மாற்று விகிதத் தகவல்களை பரிமாறிக் கொண்ட காரணத்தால், சிங்கப்பூரில் உள்ள இரண்டு முக்கிய பணம் அனுப்பும் நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (CCCS) S$5.36 மில்லியன் அபராதம் விதித்துள்ளது.
இது CCCS விதித்த மிகப்பெரிய அபராதமாகும்.
ZGR Global Pte. Ltd.-க்கு S$2.79 மில்லியன் மற்றும் Hanshan Money Express Pte. Ltd.-க்கு (ஒத்துழைப்பு காரணமாக 10% தள்ளுபடி செய்து) S$2.57 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டும் சைனாடவுனில் உள்ள பீப்பிள்ஸ் பார்க் வளாகத்தில் செயல்படும் நிறுவனங்கள். 2016 முதல் 2022 வரை, இரண்டும் அந்நிய செலாவணி விகிதங்களை வாய்மொழியாகவும், தொலைபேசியிலும், குறிப்புகளாகவும் பரிமாறிக்கொண்டன.
வாடிக்கையாளர்களுக்கு நேரடி விகிதம் காட்டாமல், சந்தை விலை நிர்ணயத்தை ஒத்திசைக்க முயன்றன.
CCCS கூறுகையில், “இத்தகைய தகவல் பரிமாற்றங்கள் சந்தைப் போட்டியை குறைத்து, வாடிக்கையாளர்களின் நலனுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தது.
இதேவேளை,விலை நிர்ணய உத்திகளை பகிர்ந்துகொள்வது தடைசெய்யப்பட்ட செயலாகும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பொதுமக்கள் இது மாதிரியான செயல்களில் இருந்து எச்சரிக்கையுடன் இருப்பதும், சட்டங்களை மீறி செயல்படும் நிறுவனங்களைப் பற்றி புகாரளிப்பதும் அவசியமாகும்.