குடியிருப்பாளர்களின் நலனுக்காக திறக்கப்படும் செயிண்ட் ஆண்ட்ரூஸ் மருத்துவமனை...!!
சிங்கப்பூர்: பிடோக் சவுத் அவென்யூ 1-ல் அமைந்துள்ள செயிண்ட் ஆண்ட்ரூஸ் சமூக மருத்துவமனை, இந்த மாதம் தற்காலிகமாக செயல்படத் தொடங்குகிறது. இந்த மருத்துவமனை, மருத்துவ பரிந்துரைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளும் வசதியாக இருக்கும். நேரில் சிகிச்சை அல்லது அவசர சேவைகள் வழங்கப்படாது.
சட்ட அமைச்சரும் உள்துறைக்கான இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் தனது பேஸ்புக் பதிவில், “இத்தகைய ஏற்பாட்டின் நோக்கம் சமூக மருத்துவமனைகள் மூலம் குடியிருப்பாளர்களின் நலனை பாதுகாக்கவும், சமூக தேவைகளை பூர்த்தி செய்யவும் ஆகும்” என தெரிவித்தார்.
நோயாளிகள் நேரில் அழைத்து வர அனுமதிக்கப்படமாட்டார்கள். வருகை நேரம் மதியம் 12 மணி முதல் இரவு 8:30 மணி வரை மட்டுமே. சுற்றுச்சூழல் அமைதியைப் பராமரிக்க, மருத்துவமனையில் அவசர சேவைகள் வழங்கப்படமாட்டாது.
பார்க்கிங் பிரச்சினைகளைத் தீர்க்க, மருத்துவமனையில் 50 வாகன நிறுத்தும் இடங்களும், இறக்கி விடும் பகுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், செயிண்ட் ஆண்ட்ரூஸ் சமூக மருத்துவமனை மற்றும் சாங்கி பொது மருத்துவமனை இடையே நோயாளிகளை மாற்ற தினமும் ஆறு ஷட்டில் பேருந்துகள் இயக்கப்படும்.
24 மணி நேர பாதுகாப்பு சேவைகள் மற்றும் இரவு நேரத்தில் சத்தம் குறைவாக இருக்க ஊழியர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
கிழக்கு பொது மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் வரை, கிழக்குப் பகுதியில் வசிப்பவர்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, தற்காலிக மருத்துவ வசதி 2029 ஆம் ஆண்டின் இறுதி வரை செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.