இனி அமைச்சர்களின் தனிப்பட்ட முடிவுக்கு கட்டுப்பாடா..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஆன்லைன் பொய்கள் மற்றும் தவறான தகவல் பரவுவதைத் தடுக்கும் சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் விருப்புரிமை பயன்படுத்தப்படும் போது, அமைச்சர் சட்டத்தின் கட்டமைப்பிற்குள் செயல்பட வேண்டியது அவசியம் என்று பொது சேவைகள் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.
நாடாளுமன்ற ஒதுக்கீட்டுக் குழுவில் பொது சேவைகள் ஒருங்கிணைப்பு அமைச்சகத்தின் செலவுத்திட்டம் குறித்த விவாதத்தின் போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது அவர் இந்த விளக்கத்தை வழங்கினார்.
அமைச்சர்களுக்கு வழங்கப்படும் சட்டப்பூர்வ அதிகாரங்கள் குறித்து பேசும்போது, சட்டத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவிலான விருப்புரிமை வழங்கப்படுவது ஒவ்வொரு வழக்கின் தனிப்பட்ட சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு முடிவு எடுக்க உதவுவதற்காகவே என அவர் கூறினார். கடுமையான விதிகளை இயந்திரமாய் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நுணுக்கமான தீர்ப்பை வழங்க இது அவசியம் என்றார்.
சட்டம் இயற்றப்பட்டபோது, விருப்புரிமை வழங்கப்பட வேண்டிய காரணங்கள், அதன் நோக்கம், வரம்புகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு அமைச்சரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டப்பூர்வ பொறுப்புகளுக்கே பொறுப்பானவர்கள் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் முன் அவை அமைச்சரவையில் விவாதிக்கப்படுவதாகவும், அமைச்சரவை கூட்டாக நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் அமைப்பாக செயல்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.