இந்த தீ விபத்துகள் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின்(SCDF) முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜூலை 15ஆம் தேதி அன்று இரவு சுமார் 8:10 மணியளவில் புக்கிட் பாஞ்சாங், புளோக் 501 ஜெலபாங் ரோட்டில் அடுத்தடுத்து தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கும் தற்காப்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
புளோக் 501-ன் 10வது மாடியில் பொது நடைபாதை நிறுத்தப்பட்டிருந்த ஒரு தனிநபர் நடமாட்டச் சாதனம் (PMA) தீப்பற்றி எரிந்தது. இதனை SCDF வீரர்கள் நீர் உந்துதல் மூலம் அணைத்தனர்.
அதே நேரத்தில் அதன் 4வது மாடி பொது நடைபாதையில் இருந்த ஒரு மிதிவண்டி உறை தீப்பற்றியது. அங்கிருந்த பொதுமக்கள் உலர் இரசாயனத் தூள் தீயணைப்புக் கருவியைப் பயன்படுத்தி அதனை உடனடியாக அணைத்தனர்.
புகை மூட்டத்தால் லேசான மூச்சு திணறல் ஏற்பட்ட 3 பேருக்கு மருத்துவ பணியாளர்கள் முதலுதவி அளித்தனர். ஆனால் அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டனர்.
அந்தத் தொகுதி எம்பி எட்வர்ட் சியா கடந்த 2 மாதங்களில் இதே புளோக்கில் மொத்தம் 3 தீ விபத்துக்கள் பதிவாகியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் அந்தப் பகுதியில் காவல்துறை மற்றும் குடிமக்கள் ரோந்து படை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தீ வைப்பு சம்பவத்தின் பின்னணி மற்றும் கைது செய்யப்பட்டுள்ள நபரின் நோக்கம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.