இந்தோனேசியாவில் மின்-சிகரெட்டை தடை செய்ய கோரிக்கை..!! காரணம்..?
இந்தோனேசியாவில் மின்-சிகரெட் பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவின் தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு நிறுவனம் (BNN) நடத்திய ஆய்வில், சில மின்- சிகரெட்டுகளில் போதை பொருள் உள்ளடக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மின்-சிகரெட்டுகளின் விற்பனையை முழுமையாகத் தடை செய்ய அரசாங்கத்திடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜகார்த்தா போஸ்ட் வெளியிட்ட தகவலின்படி, 341 இ-சிகரெட் சாதனங்கள் மற்றும் இ-சிகரெட் திரவ மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் குறைந்தது 11 மாதிரிகளில் செயற்கை கன்னாபினாய்டுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 23 மாதிரிகளில் எட்டோமிடேட் மற்றும் ஒரு மாதிரியில் மெத்தாம்பேட்டமைன் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த விவரங்களை BNN இயக்குநர் ஜெனரல் சுயுடி அரியோ செட்டோ ஜகார்த்தாவில் நடைபெற்ற போதைப்பொருள் கட்டுப்பாட்டு கருத்தரங்கில் வெளியிட்டார். சில மின்-சிகரெட் திரவங்கள் வகை I மற்றும் வகை II போதைப்பொருட்களுடன் கலக்கப்பட்டுள்ளன என்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்தோனேசிய சட்டப்படி, வகை I போதைப்பொருட்கள் மிகவும் அடிமையாக்கும் தன்மை கொண்டவை.அவை ஆராய்ச்சிக்காக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. வகை II போதைப்பொருட்கள் கடுமையான மருத்துவ மேற்பார்வையின் கீழ் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இத்தகைய பொருட்கள் பொதுவாக விற்பனை செய்யப்படுவது பெரும் ஆபத்தாக பார்க்கப்படுகிறது.
மேலும், ஜனவரி 16ஆம் தேதி தெற்கு ஜகார்த்தாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் செயல்பட்ட நிலத்தடி ஆய்வகத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சுமார் 5 லிட்டர் எட்டோமிடேட் கொண்ட கொள்கலன் கைப்பற்றப்பட்டது. இது சட்டவிரோத விற்பனைக்காக மின்-சிகரெட் தோட்டாக்களில் நிரப்பப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மத்திய நரம்பு மண்டலத்தை கடுமையாக பாதிக்கும் இந்தப் பொருட்கள், போதை மற்றும் தீவிர உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மின்-சிகரெட்டின் பெயரில் போதைப்பொருள் பரவுவதை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.