மொபைல் போன் கவனிச்சிதறலால் நடந்த விபத்து..!!! வைரலாகும் வீடியோ..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மொபைல் போனை பயன்படுத்திக் கொண்டிருந்த நிலையில், நடைபாதையிலிருந்து சாலையை கடக்க முயன்ற சைக்கிள் ஓட்டுநர் ஒருவர், இடதுபுறம் திரும்பிய காருடன் மோதிய சம்பவம் கான்பெர்ரா பகுதியில் நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்து, 10ஆம் தேதி மதியம் 12.33 மணியளவில் கான்பெர்ரா இணைப்பு சாலையில் நடந்ததாக SGRV தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.
அதில் வெளியிடப்பட்ட வீடியோவில், சைக்கிள் ஓட்டுநர் தனது இடது கையில் மொபைல் போனை பிடித்துக்கொண்டு, தொலைபேசி அழைப்பில் இருப்பது போல் நடைபாதையில் சவாரி செய்வது தெளிவாகக் காணப்படுகிறது. அப்போது, ஒரு கார் இடதுபுறமாக திரும்பிய நிலையில், சைக்கிள் ஓட்டுநர் சாலையைக் கடக்கிறார்.
வீடியோ காட்சிகளின்படி, சைக்கிள் ஓட்டுநர் காரை கவனித்திருந்தாலும், சரியான நேரத்தில் நிறுத்த முடியாமல், அடுத்த நொடியில் காரின் மீது மோதியுள்ளார். இதன் காரணமாக அவர் சமநிலையை இழந்து தரையில் விழுந்தார். சம்பவத்தை பார்த்த வழிப்போக்கர்கள் உடனடியாக திரும்பி என்ன நடந்தது என்பதை கவனித்தனர்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 500க்கும் மேற்பட்ட கருத்துகளும், 300க்கும் அதிகமான பதிவுகளும் பெற்றுள்ளன.
பல இணையவாசிகள், சைக்கிள் ஓட்டுநரின் அலட்சியமான நடத்தையை விமர்சித்து, சவாரி செய்யும் போது சுற்றுப்புறங்களை கவனமாக பார்க்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். அதே நேரத்தில், சிலர் வாகன ஓட்டுநர்களும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டின் போக்குவரத்து விதிமுறைகளின்படி, சைக்கிள் ஓட்டுபவர்கள் சவாரி செய்யும் போது மொபைல் போன்களை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. சாலையை கடக்கும் முன் அல்லது சாலையில் செல்லும் முன், அவர்கள் வேகத்தை குறைக்கவோ அல்லது வாகனத்தை நிறுத்தி பாதுகாப்பை உறுதி செய்யவோ வேண்டும்.
இந்த விதிகளை மீறி, முதல் முறையாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 1,000 டாலர் வரை அபராதம், மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மீண்டும் மீண்டும் குற்றம் செய்வோர், இதைவிட கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.