பொங்கோல் டிஜிட்டல் பூங்காவில் புதிய சிங்கப்பூர் பாலிடெக்னிக் வளாகம் திறப்பு…!!!
சிங்கப்பூர்: பொங்கோல் டிஜிட்டல் பூங்காவில் அமைந்துள்ள புதிய சிங்கப்பூர் பாலிடெக்னிக் வளாகம் நாளை (16.09.25) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது. ஜேடிசி வணிக பூங்காவுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த வளாகம், மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதோடு, அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு ஓய்வு மற்றும் பொழுதுபோக்கிற்கான புதிய இடமாகவும் அமைகிறது.
2009 இல் நிறுவப்பட்ட சிங்கப்பூர் தொழில்நுட்ப நிறுவனம் இதுவரை தனிப்பட்ட வளாகமின்றி, டோவர் தலைமையகம் மற்றும் ஐந்து பாலிடெக்னிக் கல்லூரிகளில் பரவியிருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல், ஆசிரியர்களும் மாணவர்களும் படிப்படியாக புதிய வளாகத்துக்கு மாற்றப்பட்டு, தற்போது சுமார் 11,000 மாணவர்களும் 1,300 பணியாளர்களும் இங்கு உள்ளனர்.
மொத்தம் 9.1 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள வளாகம், மேற்கு மற்றும் கிழக்கு என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. MRT நிலையம், பேருந்து இடைமாற்றம், கார் நிறுத்துமிடங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளதால், இது சிங்கப்பூரின் முதல் “கார்-லைட்” மண்டலமாக உருவாக்கப்பட்டுள்ளது.
வளாகத்தின் வடிவமைப்பில் நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்டிடங்களும் BCA கிரீன் மார்க் பிளாட்டினம் விருதை பெற்றுள்ளன. மேலும், இரண்டு கட்டிடங்கள் மிகக் குறைந்த ஆற்றல் செலவுடையதாகும். இயற்கை காற்றோட்டம், சூரிய சக்தி, PDV குளிரூட்டும் தொழில்நுட்பம் போன்ற அம்சங்கள் மாணவர்களுக்கு சூழல் நட்பு அனுபவத்தை வழங்குகின்றன.
கோனி தீவு, புங்கோல் நீர்முனை, சுங்கே செராங்கூன் நதி ஆகியவற்றால் சூழப்பட்டுள்ள வளாகம், இயற்கை அழகோடு மாணவர்களுக்கு கல்வியையும் ஓய்வையும் ஒருங்கே வழங்குகிறது.
சுமார் 11 ஆண்டுகள் திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, நாளை (16.09.25)நடைபெறவுள்ள திறப்பு விழாவால், சிங்கப்பூரின் கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது.