“புதிய தலைமுறைக்கு ஏற்ப CPF அமைப்பில் மாற்றம் தேவை”- லீ சியன் லூங்
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறுகையில், நாட்டின் மத்திய வருங்கால வைப்பு நிதி (CPF) அமைப்பு உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த ஓய்வூதிய முறைகளில் ஒன்றாக இருப்பினும், உலகில் முழுமையாகச் சரியான ஓய்வூதிய அமைப்பு எதுவும் இல்லை என்பதால், CPF அமைப்பு மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றார்.
இந்த ஆண்டு CPF வாரியம் நிறுவப்பட்ட 70 ஆண்டு நிறைவை முன்னிட்டு தெம்பெனிஸ் ஹப்பில் நடைபெற்ற விழாவில், நினைவுப் புத்தகம் ஒன்றை அவர் வெளியிட்டார்.
கடந்த 70 ஆண்டுகளில் CPF அமைப்பின் வளர்ச்சி மற்றும் அதன் மக்களுக்கு வழங்கிய பங்களிப்புகளை இந்த புத்தகம் பதிவு செய்கிறது.
விழாவில் உரையாற்றிய லீ சியன் லூங், “மில்லியன் கணக்கான சிங்கப்பூரர்கள் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் வீடு வாங்குவது முதல் குடும்பத்தை பாதுகாப்பது, ஓய்வு பெறுவது வரை CPF வாயிலாக பயனடைந்துள்ளனர்,” என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், CPF அமைப்பின் முக்கிய தனிச்சிறப்பு என்னவெனில், இது மக்களின் சொந்த சேமிப்பினை அடிப்படையாகக் கொண்டது.
உலகின் பல்வேறு நாடுகளில், ஓய்வூதியங்கள் வரி அடிப்படையில் வழங்கப்படுகின்றன.ஆனால் சிங்கப்பூரில் மட்டுமே ஒவ்வொரு தலைமுறையும் தங்கள் சொந்த தேவைக்கேற்ப சேமிக்கிறது என்று கூறினார்.
மூத்த அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியதாவது, CPF அமைப்பு மக்கள் பணியாற்றும் ஆண்டுகளில் அதிகமாகச் சேமிக்கவும், ஓய்வுக்கு பின்னர் விவேகமாக பணத்தை கையாளவும் வாய்ப்பளிக்கிறது. இது வேலைவாய்ப்பை நீட்டிக்கவும், பணியிடங்களில் தங்கவும் ஊக்குவிக்கிறது.
மேலும் இன்றைய காலத்திற்கு ஏற்ப CPF அமைப்பில் சாத்தியமான மற்றும் பயனுள்ள மாற்றங்கள் மட்டுமே கொண்டு வரப்படும் என்று அவர் உறுதி செய்தார்.
இன்றைய சமூகத் தேவைகளும் வேலை முறைமைகளும் மாறிவருவதால், CPF அமைப்பும் புதிய தலைமுறை சிங்கப்பூரர்களின் எதிர்காலத்தை உறுதியாகக் கட்டமைக்கும் வகையில் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் லீ சியன் லூங் கூறினார்.