வெளிநாட்டு ஊழியர்களுக்கு பொற்காலமாக மாறிய F1 சீசன்..!!
சிங்கப்பூர்:ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் என்பது ஒரு சர்வதேச விளையாட்டு போட்டி மட்டுமல்ல,அது சிங்கப்பூரின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கமாகவும் திகழ்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த முக்கிய நிகழ்வு,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் ஈர்க்கும் நிலையில், பல சிங்கப்பூரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கூடுதல் வருமானம் ஈட்டுகின்றனர்.
தனியார் வாடகை கார் ஓட்டுநரான லியுஜி யாசெங்,வழக்கமாக காலை 9 மணிக்கு பணியைத் தொடங்கி நள்ளிரவுக்குள் முடிப்பார். ஆனால் இந்த F1 சீசனில், அவர் தனது வேலை நேரத்தை அதிகாலை 3 மணி வரை நீட்டிக்கிறார்.
F1 மூன்று நாட்கள் மட்டுமே,எனவே தூக்கத்தை குறைத்தாலும் அதிக பயணிகளை ஏற்றி கூடுதல் பணம் சம்பாதிக்கிறேன். ஒரு நாளுக்கு சுமார் S$150 வரை கூடுதலாக கிடைக்கிறது,”என்று லியு கூறினார்.
அதேபோல, பல்கலைக்கழக மாணவரும் ஹோட்டல் விருந்து மண்டப ஃபோர்மேனாக பகுதிநேரமாக பணிபுரியும் லின் யுவான், F1 நாட்களில் தனது வேலை நேரம் வழக்கமான 6 மணி நேரத்திலிருந்து 12 மணிநேரமாக உயர்ந்ததாக கூறினார்.
“பாதையை அமைப்பதும் பிரிப்பதும் எல்லாம் எங்களின் பொறுப்பாக இருப்பதால் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டி வருகிறது. ஆனால் அந்தக் காலத்தில் கிடைக்கும் வருமானம் என் வழக்கமான வருமானத்தை விட இரண்டு மடங்கு அதிகம். இது என் பல்கலைக்கழக கட்டணங்களுக்கும்,எதிர்கால வீடு வாங்கும் திட்டத்திற்கும் உதவுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் பொருளாதார நிபுணர்கள் கூறுவதாவது, ஃபார்முலா 1 கிராண்ட் பிரிக்ஸ் நிகழ்வு நடைபெறும் மூன்று நாட்களில் மட்டும், சிங்கப்பூர் சுற்றுலா மற்றும் சேவைத் துறைகளில் சுமார் லட்சக்கணக்கான டாலர்கள் வருமானம் ஈட்டுவதாக தெரிவிக்கின்றனர்.
பயணிகள் வரவு அதிகரிப்பதால், ஹோட்டல்கள், உணவகங்கள், போக்குவரத்து சேவைகள் ஆகிய அனைத்தும் மிகுந்த லாபம் காண்கின்றன.
ஃபார்முலா ஒன் சிங்கப்பூர் நைட் கிராண்ட் பிரிக்ஸ் அக்டோபர் 3 முதல் 5 வரை நடைபெறுகிறது.இதை சேனல் 5 மற்றும் MeWatch தளங்களில் நேரடியாகக் காணலாம்.