சிங்கப்பூர்:சிங்கப்பூர் பொது மருத்துவமனை, இளைஞர்களின் சமூக பங்களிப்பையும் சுகாதாரத் துறையில் அவர்களின் ஈடுபாட்டையும் அதிகரிக்கும் நோக்கில், தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து புதிய ஒத்துழைப்பு முயற்சியை தொடங்கியுள்ளது. இதன் மூலம், அடுத்த மூன்று ஆண்டுகளில் 3,500க்கும் மேற்பட்ட பயிற்சி மற்றும் தன்னார்வ சேவை வாய்ப்புகள் சிங்கப்பூர் இளைஞர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சிங்கப்பூர் பொது மருத்துவமனை, இளைஞர் படை சிங்கப்பூர் மற்றும் தன்னார்வ அமைப்பான ட்ரைஜென் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்நிகழ்வில் கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் துறைகளுக்கான தற்காலிக அமைச்சரும், கல்வித் துறைக்கான மூத்த துணை அமைச்சருமான லியோங் சுன் வாய் கலந்துகொண்டார்.
முந்தைய ஆறு வார பைலட் திட்டத்தின் போது, இளம் தன்னார்வலர்களின் உதவியுடன் பராமரிக்கப்பட்ட டிமென்ஷியா மற்றும் டெலிரியம் பாதிக்கப்பட்ட நோயாளிகள், மற்ற நோயாளர்களுடன் ஒப்பிடுகையில், சராசரியாக மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலம் மூன்று நாட்கள் வரை குறைந்தது என்பதும் தெரியவந்துள்ளது. இது இளைஞர் தன்னார்வ சேவையின் மருத்துவப் பயன்களை வெளிப்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஒத்துழைப்பின் மூலம், சுமார் 20,000 நோயாளிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னார்வமாக இணையும் இளைஞர்கள், பயிற்சி பெற்ற பின்னர், தொழில்முறை மருத்துவ ஊழியர்களின் வழிகாட்டுதலின் கீழ், நோயாளி பராமரிப்பு, வீட்டு பராமரிப்பு சேவைகள் மற்றும் மருத்துவமனை ஆதரவு பணிகளில் பங்கேற்க முடியும்.
மேலும், இந்த திட்டத்தின் மூலம் 200க்கும் மேற்பட்ட இளைஞர் தலைவர்கள் உருவாக்கப்படுவார்கள் என்றும், சமூக நலனுக்காக இளைஞர்கள் தொடர்ந்து பங்களிக்க இது ஒரு வலுவான அடித்தளமாக அமையும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இம்முயற்சி, இளம் சிங்கப்பூரர்கள் சமூகத்திற்குத் திரும்பக் கொடுக்கவும், நாட்டின் சுகாதாரத் தேவைகளுக்கு ஆதரவளிக்கவும் உருவாக்கப்பட்ட SG இளைஞர் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.