ஜூரோங் MRT தளத்தில் விபத்து..!!LTA அவசர உத்தரவு...!!!
சிங்கப்பூர்: ஜூரோங் ஏரியா லைன் MRT கட்டுமான தளத்தில் நடந்த துயரச்சம்பவத்தில், 46 வயதுடைய ஒரு தள மேற்பார்வையாளர் உயிரிழந்தார். இதையடுத்து, நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அனைத்து உயர பணிகள் தொடர்பான திட்டங்களிலும் தற்காலிக வேலை நிறுத்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த சம்பவம் வியாழக்கிழமை (13.11.25) காலை 202 பாண்டன் கார்டன் அருகிலுள்ள கட்டுமான தளத்தில் நடந்தது. மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், அந்த மேற்பார்வையாளர் சாரக்கட்டுகளில் இருந்து ஏறியபோது சுமார் 9 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்ததாக கூறப்பட்டுள்ளது.
அவரை உடனடியாக இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் உயிரிழந்ததாக அறிவித்தனர்.
LTA தனது அறிக்கையில், “அனைத்து பாதுகாப்பு சம்பவங்களையும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். பணியிடங்களில் உயரத்தில் பணிபுரியும் போது கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளது.
மனிதவள அமைச்சகமும், உயரத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் எப்போதும் பாதுகாப்பு பெல்டுகளை அணிய வேண்டும் என்றும்,அவர்களின் வீழ்ச்சி தடுப்பு சேணங்கள் நன்கு உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பான நங்கூரப் புள்ளிகளில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.