எச்சரிக்கை..!! இளசுகளை அடிமையாக்கும் போதை பழக்கம்..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த ஆண்டு சட்டவிரோத போதைப்பொருள் நிலைமை சீராக இருந்தாலும், இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்கம் தொடர்ந்து கவலைக்குரியதாகவே இருந்து வருகிறது. குறிப்பாக டீனேஜ் வயதினரிடையே இந்தப் பிரச்சினை அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு வெளியிட்ட ஆண்டு அறிக்கையின்படி, கடந்த ஆண்டு மொத்தம் 3,208 போதைப்பொருள் அடிமையானவர்கள் கைது செய்யப்பட்டனர். இது முந்தைய ஆண்டை விட சுமார் 1 சதவீதம் அதிகமாகும்.
இவர்களில் 1,165 பேர் புதிய போதைப்பொருள் பயனர்கள் ஆகும். இது மொத்த கைதுகளில் 36 சதவீதமாகும். அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக, இந்தப் புதிய பயனர்களில் பாதி பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், கைது செய்யப்பட்ட இளைய போதைப்பொருள் அடிமையானவர் 12 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட போதைப்பொருளாக மெத்தம்பேட்டமைன் முதலிடத்தில் இருந்தது. புதிய போதைப்பொருள் பயனர்களில் 72 சதவீதம் பேர் இந்தப் போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து ஹெராயின் மற்றும் கஞ்சா பயன்பாடுகள் போன்றவையும் பதிவாகியுள்ளன.
கஞ்சா பயன்படுத்தியவர்களில் புதிய பயனர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கதாக இருந்தது. கைது செய்யப்பட்ட பத்து கஞ்சா பயனர்களில் ஏழு பேர் புதிய பயனர்கள் என்றும், அவர்களில் 60 சதவீதம் பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அதேவேளை, கடந்த ஆண்டு 25 போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் அகற்றப்பட்டதாகவும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் S$21.95 மில்லியன் என்றும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த அரசு மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.