ஜூரோங் கிழக்கில் நடந்த அதிரடி சோதனையில் சிக்கிய 14 பேர்..!! காரணம்..??
சிங்கப்பூர்:சிங்கப்பூர் சுங்கத்துறை, வரி செலுத்தப்படாத சிகரெட் விற்பனையை முறியடிக்கும் நோக்கில், ஜூரோங் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு தொழில்துறை கட்டிடம் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர் தங்குமிடத்தில் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது.
கடந்த மாதம் 28ஆம் தேதி தோ குவான் சாலை கிழக்கில் நடைபெற்ற இந்த சோதனையின் போது, சட்டவிரோதமாக வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை விற்பனை செய்து வந்ததாக சந்தேகத்தின் பேரில் பலர் பிடிபட்டனர்.
இந்த நடவடிக்கையில், மொத்தமாக 14 ஆண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 170க்கும் மேற்பட்ட வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கைது செய்யப்பட்டவர்களில் 12 பேருக்கு $500 முதல் $800 வரை கூட்டு அபராதம் விதிக்கப்பட்டது. மீதமுள்ள இருவர் மீது கடந்த மாதம் 30ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை வாங்குவது, விற்பது, சேமித்து வைப்பது அல்லது புகைப்பது கூட சிங்கப்பூரில் கடுமையான குற்றமாக கருதப்படுவதாக சுங்கத்துறை பொதுமக்களுக்கு மீண்டும் நினைவூட்டியுள்ளது.
சட்டத்தின் படி, இவ்வகை குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகையை விட 40 மடங்கு வரை அபராதம், அதிகபட்சமாக 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.