அதிர்ச்சி..!!!சைனா டவுன் உணவு கடையில் பற்றிய தீ..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் சைனாடவுன் பகுதியில் உள்ள ஹாங் லாம் சந்தை மற்றும் உணவு மையத்தில் நேற்று(02.01.26) மதியம் ஒரு சமையல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் 80 வயதுடைய வியாபாரி ஒருவர் அவரது சக விற்பனையாளர்களின் உடனடி உதவியால் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து மதியம் 12.40 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் கிடைத்தது.தீ, ஒரு சமையல் கடையில் இருந்த சூடான எண்ணெய் நிரப்பப்பட்ட வாணலியில் இருந்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் நடந்த நேரத்தில் கடையின் உரிமையாளர் ஜாங் குன்யுவான் கடைக்கு வெளியே இருந்ததாக தெரிவித்தார்.அருகிலுள்ள மேற்கத்திய உணவுக் கடையை நடத்தி வரும் யின் ஷிசெங், தீப்பிடித்ததை கண்டவுடன் உதவிக்கு ஓடி வந்தார்.
தீயை அணைக்க முயன்ற அவர், நிலைமை கட்டுப்பாட்டை மீறியதை உணர்ந்து, அதிர்ச்சியில் உறைந்திருந்த முதிய வியாபாரியை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
தீ விபத்தையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஐந்து கடைகள் மின்சுற்று சோதனைகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.இந்த ஆய்வுகள் ஒரு வாரத்திற்கும் மேலாக ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.சம்பந்தப்பட்ட கடைகள் ஜனவரி 10 முதல் 12 வரை படிப்படியாக மீண்டும் திறக்கப்படலாம் என வணிக சங்கம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும், கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையமும் உணவு மையத்தின் வெளியேற்ற மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை ஆய்வு செய்துள்ளதாக டிஜிட்டல் மேம்பாடு மற்றும் தகவல் அமைச்சர் ஜோசபின் தியோ தெரிவித்துள்ளார்.