சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வாட்ஸ்அப் ஃபிஷிங் மோசடியில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு ஆண்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் பலர், “உங்கள் வாட்ஸ்அப் கணக்கு சரிபார்க்கப்படவில்லை” என்ற பெயரில் குறுஞ்செய்திகள் பெற்றதாக புகார்கள் வந்தன. அந்தச் செய்திகளில் கொடுக்கப்பட்ட இணைப்புகளை சிலர் கிளிக் செய்து தங்கள் கணக்குகளைச் சரிபார்த்தபோது, மோசடி செய்பவர்கள் அவர்களின் கணக்குகள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை கைப்பற்றினர். பின்னர், அவர்கள் அந்தக் கணக்குகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளுக்கு போலி கடன் கோரிக்கைகளை அனுப்பினர்.
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாட்ஸ்அப் கணக்கில் இருந்து வெளியேற்றப்பட்டதை, அறியாத சாதனங்கள் இணைக்கப்பட்டதை அல்லது நண்பர்களிடமிருந்து போலி கடன் கோரிக்கை பற்றிய எச்சரிக்கையை பெற்ற போதுதான் தாங்கள் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தனர். ஒரு பாதிக்கப்பட்டவர் மட்டும் $1,800 க்கும் மேல் இழந்துள்ளார்.
18 மற்றும் 19 ஆம் தேதிகளில் தீவு முழுவதும் போலீசார் நடத்திய நடவடிக்கையில், 27 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிங்கப்பூரில் வாட்ஸ்அப் ஃபிஷிங் மோசடிகளை நடத்திய ஒரு பன்னாட்டு குற்றக்குழுவுடன் தொடர்புடையவர்கள் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், 7,000 க்கும் மேற்பட்ட உள்ளூர் மொபைல் பயனர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பி, தகவல்களை திருடி, வாட்ஸ்அப் கணக்குகளை தவறாகப் பயன்படுத்தி போலி கடன் கோரிக்கைகள் அனுப்பியதும் தெரியவந்துள்ளது. அதிகாரிகள் மொபைல் போன்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.