லிட்டில் இந்தியா-சிங்கப்பூரில் கடைவீடு விற்பனையில் முன்னணி..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 2025 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் நடைபெற்ற கடைவீடு விற்பனைகளில் லிட்டில் இந்தியா பகுதி குறிப்பிடத்தக்க முன்னணியைப் பெற்றுள்ளது. அந்த காலப்பகுதியில் மட்டும் S$46.3 மில்லியன் மதிப்பில் ஏழு கடைவீடுகள் இப்பகுதியில் கைமாறியுள்ளன.
சொத்து முகவை நிறுவனம் புரோப்நெக்ஸ் வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி, கடந்த ஆண்டு முழுவதும் லிட்டில் இந்தியாவில் 24 கடைவீடுகள் விற்பனையாகி, அவற்றின் மொத்த மதிப்பு S$183 மில்லியனைத் தாண்டியுள்ளது. இதன் மூலம், சிங்கப்பூரில் நடந்த மொத்த கடைவீடு பரிவர்த்தனைகளில் 25 விழுக்காட்டுக்கும் மேலானவை லிட்டில் இந்தியாவை சேர்ந்தவை.
அதே நேரத்தில், சிங்கப்பூரின் மொத்த கடைவீடு சந்தையில் பரிவர்த்தனை எண்ணிக்கை சரிவை சந்தித்துள்ளது.2025 மூன்றாம் காலாண்டில் 28 பரிவர்த்தனைகள் பதிவான நிலையில், நான்காம் காலாண்டில் அது 22 ஆகக் குறைந்தது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 21.4 விழுக்காடு குறைவும், 2024 இறுதி காலாண்டை விட 12 விழுக்காடு சரிவுமாகும்.
கடந்த ஆண்டு முழுவதும் நடைபெற்ற கடைவீடு விற்பனைகளின் மொத்த மதிப்பு S$623.2 மில்லியன் மட்டுமே இருந்தது. இது கடந்த பத்து ஆண்டுகளில் பதிவான மிகக் குறைந்த அளவாகும்
எனினும், 2026 ஆம் ஆண்டில் கடைவீடு சந்தை மீண்டும் வேகம் பெறக்கூடும் என சந்தை நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். சிங்கப்பூரின் நிலையான சொத்து சந்தை சூழலும், பொருளாதார முன்னேற்றம் குறித்த நேர்மறை எதிர்பார்ப்புகளும் இதற்கு ஆதரவாக உள்ளன.
உலகளாவிய பொருளாதார நிலையற்ற சூழ்நிலைகள் தொடர்ந்தாலும், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக அசையாச் சொத்துகளை நாடும் போக்கு நீடிக்கும் என்றும், குறிப்பாக வணிகச் சொத்துகள் அதற்கான முக்கிய தேர்வாக இருக்கும் என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.