சிங்கப்பூரில் பிப்ரவரி 28 முதல் அமலுக்கு வரும் புதிய ரூல்ஸ்..!!!

சிங்கப்பூரில் பிப்ரவரி 28 முதல் அமலுக்கு வரும் புதிய ரூல்ஸ்..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தனிநபர் தங்கள் பெயரில் பதிவு செய்யக்கூடிய போஸ்ட்பெய்டு சிம் கார்டுகளின் எண்ணிக்கையை சிங்கப்பூர் அரசு மேலும் கட்டுப்படுத்தியுள்ளது. இத்திட்டம் வரும் பிப்ரவரி 28 முதல் நடைமுறைக்கு வரும். இனி எந்த உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனத்திலும் ஒருவருக்கு அதிகபட்சமாக பத்து போஸ்ட்பெய்டு சிம் கார்டுகள் மட்டுமே பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும்.

இந்த புதிய விதிமுறையை தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (IMDA) மற்றும் சிங்கப்பூர் காவல் துறை இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் அறிவித்துள்ளன. சிம் கார்டுகளை சட்டவிரோதமாக வாங்குவதையும், அவற்றை மோசடி மற்றும் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்துவதையும் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில், குடும்ப உறுப்பினர்களுக்காக அல்லது வணிக தேவைகளுக்காக முறையாக சிம் கார்டுகளைப் பயன்படுத்தும் நபர்களின் தேவைகளும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கப்பட்டது. இதனால், புதிய கட்டுப்பாடு பிப்ரவரி 28 முதல் மேற்கொள்ளப்படும் புதிய பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

பிப்ரவரி 28க்கு முன்பு ஏற்கனவே பத்து சிம் கார்டுகளுக்கு மேல் பதிவு செய்துள்ள சட்டபூர்வ பயனர்கள், தங்களிடம் உள்ள அனைத்து சிம் கார்டுகளையும் தொடர்ந்து வைத்திருக்கலாம். இருப்பினும், அவர்கள் இனிமேல் புதிய போஸ்ட்பெய்டு சிம் கார்டுகளை பதிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேலும், அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் அனுப்ப முடியாத நிறுவனப் பெயரிலான சிம் கார்டுகள், கார்ப்பரேட் திட்டங்கள் மற்றும் தரவு மட்டுமே பயன்படுத்தப்படும் சிம் கார்டுகள் இந்த கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மோசடி செய்பவர்கள் சிம் கார்டுகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, பதிவின் போது அரசாங்கம் வழங்கிய அடையாள ஆவணங்களை கட்டாயமாக்குதல், வெளிநாட்டு பாஸ்போர்டுகளைப் பயன்படுத்தி போஸ்ட்பெய்டு சிம் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பதைத் தடை செய்தல் மற்றும் ஆன்லைன் பதிவின் போது சிங்பாஸ் வழியாக அடையாள சரிபார்ப்பை கட்டாயமாக்குதல் போன்ற கூடுதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்தகைய கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், பல சில்லறை விற்பனையாளர்கள் மூலம் சிம் கார்டுகளை வாங்கி, பின்னர் அவற்றை மோசடி குழுக்களிடம் ஒப்படைக்கும் போக்கு இன்னும் தொடர்வதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்விதமான மீறல்களில் ஈடுபடுவோர் அதிகபட்சம் 12 பிரம்படிகள் வரை தண்டனை பெறலாம். மோசடி செய்பவர்கள், மோசடி குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களை ஆட்சேர்ப்பு செய்பவர்கள் குறைந்தது 6 முதல் அதிகபட்சம் 24 பிரம்படிகள் வரை தண்டனை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK