மரண எல்லையில் இருந்து மீண்ட மினி வீராங்கனை...!!! லாராவின் வெற்றி கதை...!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 29 வாரங்களே ஆன 700 கிராம் எடையுடன் ஒரு பெண் குழந்தை பிறந்தது.அந்தக் குழந்தை தற்போது 14 மாதங்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
வாழ்வின் எல்லைகளில் இருந்து மீண்ட இந்த குழந்தையின் பெற்றோர்கள், 2025ஆம் ஆண்டுக்கான “இன்ஸ்பிரேஷனல் கேர்கிவர் விருது” பெற்றுள்ளனர்.
அவசர சிசேரியனில் பிறந்த குழந்தை..
2021 ஆம் ஆண்டு, கருப்பையில் 28 வாரத்தில் இருந்தபோது, சுவா ஸ்ஸே ஹ்வெய் என்பவர் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். ஆனால் அவரது நிலைமை சிக்கலாக மாறியதால், KK பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அவசர சிசேரியன் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிறந்ததும், குழந்தை லாரா, ஒரு கையை விடச் சிறிய உருவம்,நுரையீரல் வளர்ச்சியற்ற நிலையில் பிறந்தார்.
லாரா பிறந்தவுடன் பல்வேறு சுவாச சாதனங்களை நம்பி உயிர் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. மருத்துவர்கள் அவளுக்கு நீடித்த நுரையீரல் நோயும், கடுமையான சுவாச சிக்கலும் இருப்பதைத் தெரிவித்தனர். 20 நாட்கள் கடந்த பிறகே, தம்பதியினர் தங்கள் குழந்தையை முதன்முறையாகத் தாங்கிக்கொள்ள முடிந்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான், தோலுக்கு தோல் தொடர்பு ஏற்படுத்த முடிந்தது.
மருத்துவமனையே இரண்டாவது வீடாக மாறியது…
COVID-19 வருகை கட்டுப்பாடுகள் காரணமாக, 14 மாதங்கள் முழுவதுமாக பெற்றோர்கள் மருத்துவமனையில் இருந்தனர். லாராவின் முதல் பிறந்த நாளும் மருத்துவ வார்டில் கொண்டாடப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் சிகிச்சை குழுவினர் அவர்களுக்கு உற்சாகமூட்டும் ஆதரவாக இருந்தனர். இறுதியில், 429வது நாளில், லாரா வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.
லாரா வீட்டுக்கு வந்த பிறகும், ட்ரக்கியோஸ்டமி குழாய், நாசோகாஸ்ட்ரிக் குழாய் போன்ற உபகரணங்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய தேவை இருந்தது. அவரது சுவாசம் மற்றும் உணவுக்குழாய் தொடர்பான பிரச்சனைகளை கண்காணிக்க பெற்றோர் 24 மணி நேரமும் விழிப்புடன் செயல்பட வேண்டியுள்ளது. குழாய்களை மாற்றுவதும், சாதனங்களை இயக்குவதும் பெற்றோரின் பொறுப்பாகவே இருந்தது.
இன்ஸ்டாகிராமில் உற்சாகம் – Raising Rara
தங்கள் அனுபவங்களை பகிரவும், மற்ற பெற்றோர்களுக்கு வழிகாட்டவும், “@raising.rara” என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றைத் துவங்கியுள்ளனர். இதில் லாராவின் வளர்ச்சிப் பயணம், சிகிச்சை முயற்சிகள், குடும்ப உறவுகள் போன்றவை பகிரப்பட்டு வருகின்றன.
அவள் வெளியே சென்றால், அவரது உடலில் உள்ள குழாய்கள் மற்றும் உபகரணங்கள் வழிப்போக்கர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. “அவளுக்கு என்ன பிரச்சனை?” என்று கேட்பதற்குப் பதிலாக, ஒரு நட்பான சிரிப்பைக் காண விரும்புவதாகவும், அந்த குழந்தைகளும் மென்மையாக நடத்தப்பட வேண்டியவர்களே எனவும் ஸ்ஸே ஹ்வெய் வலியுறுத்துகிறார்.
பெரியவர்கள் காட்டும் அணுகுமுறையே அந்த சிறிய உயிர்களின் சமூக உணர்வையும், நம்பிக்கையையும் கட்டமைக்கிறது என்று கூறினார்.