சிங்கப்பூரில் அதிரடி சோதனை...!!! சட்டவிரோத உணவு டெலிவரி ஓட்டுநர்கள் கைது..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சட்டவிரோத உணவு விநியோக ஓட்டுநர்களை கட்டுப்படுத்த மனிதவள அமைச்சகம் தீவு முழுவதும் அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டது.
இதில் மூன்று வெளிநாட்டினரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
தேசிய வளர்ச்சி மற்றும் போக்குவரத்துக்கான மூத்த துணை அமைச்சர் சன் சூலிங் பேஸ்புக் பதிவில் தெரிவித்ததாவது, கடந்த வாரம் கிடைத்த புகார்கள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில், தேசிய விநியோக பணியாளர் சங்கத்தால் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இச் சோதனையில் மொத்தம் 375 விநியோக ஓட்டுநர்கள் ஆய்வு செய்யப்பட்டனர். அவற்றில் சட்டவிரோதமாக வேலை செய்த மூன்று வெளிநாட்டினர்கள் விசாரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
மேலும், இந்த வெளிநாட்டினரை சட்டவிரோதமாக உள்ளூர் உணவு விநியோகத்தில் ஈடுபடுத்திய சிங்கப்பூரர்களையும் அரசு விசாரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் விதிமுறைகளின் கீழ், செல்லுபடியாகும் பணி அனுமதி இல்லாமல் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு $20,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அதேபோல், வெளிநாட்டினரை தவறாக கணக்குகளைப் பயன்படுத்தத் தூண்டும் உள்ளூர்வாசிகளும் இதே தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும்.
மேலும் இம்மாதிரியான சட்டவிரோதமாக வேலை செய்வதைத் தடுக்க இத்தகைய சட்ட அமலாக்க நடவடிக்கை அவசியம் என சன் சூலிங் வலியுறுத்தினார்.