அதிர்ச்சி..!! ஜகார்த்த பள்ளி மசூதியில் குண்டு வெடிப்பு..!!
ஜகார்த்தா: இந்தோனேசிய தலைநகரான ஜகார்த்தாவில் உள்ள ஒரு பள்ளி மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, ஜகார்த்தாவின் வடக்கே உள்ள கெலாபா காடிங் பகுதியில் நேற்று (07.11.25) கடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 54 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.
நண்பகல் தொழுகை தொடங்கிய நேரத்தில் மசூதியின் உள்ளேயும் வெளியேயும் இரண்டு பெரிய வெடிச் சத்தங்கள் ஒலித்ததாகவும், அதனைத் தொடர்ந்து அடர்ந்த புகை பரவி மாணவர்கள் பீதியில் தப்பிச் சென்றதாகவும் சாட்சிகள் கூறினர்.
சம்பவ இடத்தில் சந்தேக நபருக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் ஒரு பொம்மை இயந்திரத் துப்பாக்கியை போலீசார் மீட்டுள்ளனர்.
அதில் “வெள்ளை மேலாதிக்கவாதி” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. எனினும்,இது பயங்கரவாதத் தாக்குதல் என உறுதிப்படுத்தப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெடிப்பில் காயமடைந்த சந்தேக நபருக்கு தற்போது அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது.
அவரது குடும்பம், பின்னணி மற்றும் வாழ்க்கைச் சூழல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட தகவலின்படி, சிறுவன் ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவர் என்றும், நீண்டகாலமாக பள்ளியில் கொடுமைப்படுத்தலுக்கு ஆளாகியிருப்பதாகவும், அதனால் பழிவாங்கும் நோக்கில் தற்கொலைத் தாக்குதலுக்கு முயன்றிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.