சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கழக வீடுகள் மற்றும் தனியார் வீடுகளில் கூடுதல் வாடகைதாரர்கள் தங்க அனுமதிக்கும் தற்காலிக உச்சவரம்பு மேலும் ஈராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு முடிவடையவிருந்த இந்த ஏற்பாடு 2028 இறுதி வரை நடைமுறையில் இருக்கும்.
அதன்படி, நாலறை அல்லது அதற்கும் பெரிய கழக வீடுகளில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத 8 பேர் வரை தங்க அனுமதி வழங்கப்படும்.
முன்பு இந்த வரம்பு 6 பேராக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் குறைந்தது 90 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட தனியார் வீடுகளுக்கும் இதே விதி பொருந்தும்.
வாடகை வீடுகளுக்கான தேவை தொடர்ந்து வலுவாக இருப்பதால், தற்காலிக தீர்வாக இந்த தளர்வு நீட்டிக்கப்பட்டதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் நகரச் சீரமைப்பு ஆணையமும் தெரிவித்துள்ளன.
வாடகை சந்தை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், 2028க்குப் பிறகு வரம்பை நீட்டிப்பது குறித்து மறுஆய்வு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.