சிங்கப்பூரில் பொது இடத்தில் அநாகரீக செயல் : இளைஞர் கைது..!!
சிங்கப்பூரில் பொது இடத்தில் அநாகரீக செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக 18 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாார்.
ijooz நிறுவனத்தின் ஆரஞ்சு ஜூஸ் வழங்கும் இயந்திரத்திலிருந்து உறிஞ்சிகுழலை (Drinking Straw) எடுத்து, அதை வாயில் வைத்து விட்டு மீண்டும் அந்த இயந்திரத்திலேயே வைத்த குற்றத்திற்காக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் அவ்வாறு செய்ததை காணொளியாக அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கடந்த மாதம் (மார்ச்) 12ஆம் தேதி அன்று பதிவிட்டிருந்தார். அப்பதிவில் அந்த ஆரஞ்சு ஜூஸ் விற்பனை இயந்திரம் இருக்கும் இடத்தை குறிப்பிடவில்லை. அவர் ஸ்டோரியில் பதிவிட்டு இருந்த காணொளியானது இணையத்தில் வைரலாகியது.
அந்த காணொளி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து, விவாதத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் (மார்ச்) 27 தேதி அன்று இந்த சம்பவம் குறித்து iJooz நிறுவனமானது காவல்துறையில் புகார் அளித்தது.
இந்த சம்பவத்தால் iJooz நிறுவனம் மிக வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளதாக கூறியுள்ளது. இந்த சம்பவம் நடந்ததன் விளைவாக இயந்திரங்களை ஆய்வு செய்தல், உறிஞ்சிகுழல்களை மாற்றுதல் மற்றும் இயந்திரங்களில் கிருமிகளை நீக்குதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக iJooz நிறுவனம் கூறியுள்ளது.
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் ஆகியவை தங்களுக்கு மிகவும் முக்கியமானது என்றும் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
2016 ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனமானது, தனது அனைத்து இயந்திரங்களையும் தினமும் சுத்தம் செய்து வருவதுடன் மட்டுமல்லாமல், சுகாதார மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளையும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான புகார் காவல்துறைக்கு கிடைத்ததையொட்டி, சம்பந்தப்பட்ட அந்த இளைஞர் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை இன்று (மார்ச் 3) அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் இது குறித்த விசாரணையை காவல்துறை தொடர்ந்து நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.