வணிக மேம்பாட்டுக்கு பலன் தரும் புதிய ‘EDGE’ திட்டம்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வணிகங்களுக்கு ஆதரவான மற்றும் நம்பகமான சூழலை உருவாக்கும் நோக்கில், அரசாங்கம் மானிய விண்ணப்ப முறையை எளிமைப்படுத்துகிறது. இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து ‘எளிய வணிக வாயில்’ (EDGE) என்ற புதிய திட்டம் அறிமுகமாகிறது.
இந்த திட்டம், முன்பு செயல்பட்ட மூன்று மானிய திட்டங்களை ஒருங்கிணைக்கிறது. இதனால் எந்த செயல்பாடு எந்த திட்டத்தில் சேரும் என்பதை தனியாக தீர்மானிக்க வேண்டிய சிக்கல் நீங்கும். இதனால் நிறுவனங்கள் ஒரே தளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும்.
இந்த புதிய திட்டம் சிறு, நடுத்தர நிறுவனங்கள் மட்டுமன்றி அனைத்து சிங்கப்பூர் நிறுவனங்களுக்கும் திறந்ததாக இருக்கும். தகுதியான செயல்பாடுகளுக்கு ஆண்டுதோறும் அதிகபட்சமாக சிங்கப்பூர் S$100,000 வரை மானியம் பெறலாம்.
கூடுதல் உதவி தேவைப்படும் நிறுவனங்கள் Enterprise Singapore-க்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஒவ்வொரு வழக்கையும் தனிப்பட்ட அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களாக இருக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் பேசிய வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங்,இந்த மாற்றம் வணிகங்கள் அரசாங்க ஆதரவை விரைவாக பெற உதவும் என்று கூறினார். இதன் மூலம் நிறுவனங்கள் புதுமை மற்றும் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்த முடியும் என்றார்.
மேலும், பிரதமரும் நிதியமைச்சருமான திரு.லாரன்ஸ் வோங் தகுதியுள்ள உள்ளூர் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மானியம் 50 விழுக்காட்டிலிருந்து 70 விழுக்காடு வரை உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த புதிய திட்டம் வணிக வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.