மோசடிகளை குறைக்க சிங்கப்பூர் அரசு எடுக்கும் புதிய முயற்சி..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில்“மோசடிகளுக்கு எதிராக நாம் செயல்பட முடியும்” என்ற கருப்பொருளில் தேசிய மோசடி எதிர்ப்பு கண்காட்சி 2025 இன்று(08.11.25) தோ பாயோவில் உள்ள வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் மத்திய பிளாசாவில் தொடங்கியது.
இந்தக் கண்காட்சி இரண்டு நாட்களுக்கு காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.
உள்துறை அமைச்சகம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்திற்கான இணையமைச்சர் வூ பீமிங் கலந்து கொண்டு, இந்த ஆண்டின் முதல் பாதியில் 19,000க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,S$450 மில்லியனை தாண்டிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறினார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது வழக்குகள் குறைந்திருந்தாலும், மோசடி அரசு கவலையாகவே உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
வூ பீமிங், பொதுமக்கள் தங்கள் விழிப்புணர்வை உயர்த்தி, மோசடிகளைத் தடுக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். தற்போது 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட மோசடிகள் பாதிக்கப்பட்டவர்கள் தாமாகவே பணத்தை மாற்றியதாலோ அல்லது தனிப்பட்ட தகவல்களை வழங்கியதாலோ நடந்ததாக அவர் குறிப்பிட்டார்.
கண்காட்சியில் பல ஊடாடும் மண்டலங்கள், கல்வி நடவடிக்கைகள் மற்றும் மினி-விளையாட்டுகள் மூலம் பொதுமக்கள் மோசடிகளில் பயன்படுத்தப்படும் உளவியல் கையாளுதல்களை நேரடியாக அனுபவிக்க முடிகிறது.
அதேபோல் பல அரசு அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் தங்கள் அரங்குகளில் மோசடி தடுப்பு வழிகாட்டுதல்களை வழங்கி, டிஜிட்டல் பாதுகாப்பு பழக்கங்களை வளர்க்க ஊக்குவித்துள்ளன.
மூத்த குடிமக்களுக்காக “லவ்-லிங்க் சர்வீஸ் சொசைட்டி” அமைப்பு நடத்தும் மோசடி எதிர்ப்பு பட்டறைகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அவர்கள் மூத்தோருக்கு “ஸ்கேம்ஷீல்ட்” செயலியை நிறுவுவதற்கான நேரடி வழிகாட்டுதலையும் வழங்குகின்றனர்.
கண்காட்சியைப் பார்வையிட்ட பொதுமக்கள் இது ஒரு பயனுள்ள முயற்சி எனவும், குழந்தைகளும் குடும்பத்தினரும் மோசடி தடுப்பு குறித்து விளையாட்டுகள் வழியாக கற்றுக்கொள்வது சிறந்த முயற்சி எனவும் பாராட்டினர்.