மருத்துவர்களின் எண்ணிக்கையில் சிங்கப்பூர் அதிரடி வளர்ச்சி...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடந்த பத்து ஆண்டுகளில் உள்ளூர் மருத்துவப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்ததன் விளைவாக, மருத்துவ ஊழியரணியில் வெளிநாட்டில் பயிற்சி பெற்ற மருத்துவர்களின் விகிதம் கிட்டத்தட்ட 40% ஆகக் குறைந்து நிலைபெற்றுள்ளது. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தாயகம் திரும்பி பணியாற்றும் சிங்கப்பூரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை சுமார் 50% அதிகரித்து, 2024ஆம் ஆண்டு நிலவரப்படி 17,582 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அதிகரித்த 50 விழுக்காடு மருத்துவர் எண்ணிக்கையில், பத்துப் பேரில் அறுவர் சிங்கப்பூரில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் மருத்துவப் பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்ததே இந்த முன்னேற்றத்திற்குக் காரணமாகும்.
இதற்கிடையே,சுகாதார அமைச்சகமும் சிங்கப்பூர் மருத்துவக் கழகமும் இணைந்து எட்டு வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை மருத்துவத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பட்டியலில் சேர்த்துள்ளன. இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களின் மொத்த எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.
சிங்கப்பூரின் மக்கள்தொகை மூப்படைந்து வருவதால், சுகாதாரத் தேவைகள் அதிகரித்து வருகின்றன. இந்த தேவையை பூர்த்தி செய்ய உள்ளூர் மருத்துவர்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்துவதோடு,குறைந்த அளவில் வெளிநாட்டில் பயிற்சி பெற்ற மருத்துவர்களும் தேவைப்படுவார்கள் என்று அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.