சிங்கப்பூரில் நடந்த துயரச்சம்பவம்..!! 24 வயது தொழிலாளி உயிரிழப்பு..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தானியங்கி நெகிழ் கதவை பழுதுபார்க்கும் பணியின் போது ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்தது.24 வயதான கட்டுமானத் தொழிலாளர் ஒருவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது கதவு சரிந்து விழுந்ததில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
மனிதவள அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்தச் சம்பவம் வியாழக்கிழமை (06.11.25) மாலை 4 மணியளவில் ஜாலான் பாரி புரோங் பகுதியில் உள்ள தனியார் இல்லத்தில் நடைபெற்றது. பழுதடைந்த தானியங்கி நெகிழ் கதவை ஆய்வு செய்துகொண்டிருந்த தொழிலாளி மீது திடீர் என்று விழுந்தது.
இறந்த தொழிலாளி Yong Fong Autogate Pte Ltd நிறுவனத்தில் பணிபுரிந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மனிதவள அமைச்சகம் விசாரணை தொடங்கியுள்ளதாகவும், வேலையிட பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டனவா என்பதையும் ஆராய்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சகம் மேலும் தெரிவித்ததாவது, கனமான வாயில்கள் அல்லது இயந்திரப் பொருட்களை கையால் தூக்கவோ சரிசெய்யவோ தொழிலாளர்கள் முயற்சிக்கக் கூடாது. பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான பயிற்சி,மேற்பார்வை மற்றும் பாதுகாப்பான உபகரணங்கள் வழங்கப்படுதல் முதலாளிகளின் பொறுப்பாகும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
போலீசார் தெரிவித்ததாவது, முதற்கட்ட விசாரணையில் இது கொலை வழக்கு அல்ல என்றும், சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.