என்ன...!!! இதுதான் சிங்கப்பூரின் கடைசி சுரங்கப்பாதையா?
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சியாவோ ஜென்சியாங், கிராஸ் தீவுப் பாதையின் இரண்டாம் கட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு இன்று (ஜூலை 7) தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர், கிராஸ் தீவுப் பாதை என்பது சிங்கப்பூரில் அமைக்கப்படும் கடைசி கிழக்கு-மேற்கு திசை சுரங்கப்பாதையாக இருக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாகக் குறிப்பிட்டார். அதற்குக் காரணம், இதுபோன்ற பெரிய ரயில் பாதைகளை உருவாக்கும் வகையில் நாட்டில் இடத்தட்டுப்பாடு காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அவரது உரையின் போது, எதிர்கால போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். வடக்கு-தெற்குப் பாதை, கிழக்கு-மேற்குப் பாதை மற்றும் வடகிழக்கு பாதையைப் போலவே, கிராஸ் தீவுப் பாதையும் ஆரம்பத்தில் ஆறு பெட்டிகளைக் கொண்ட ரயில்களால் இயக்கப்படும்.
ஆனால் இந்த பாதையின் தனிச்சிறப்பு என்னவென்றால், எதிர்காலத்தில் எட்டு பெட்டிகளைக் கொண்ட ரயில்களாக விரிவாக்கம் செய்யும் வகையில் ஆரம்பத்திலிருந்தே தேவையான இடம் ஒதுக்கப்பட்டு, அதற்கேற்ப அனைத்து அமைப்புகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தண்டவாளங்கள், சிக்னல்கள், மின் அமைப்புகள், மற்றும் ரயில் நிலையங்கள் அனைத்தும் இந்த விரிவாக்கத்திற்குத் தக்கவாறு கட்டமைக்கப்படுகின்றன. இத்துடன், கிராஸ் தீவுப் பாதையின் மூன்றாம் கட்டம் தொடர்பான ஆய்வுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதுடன், அதன் முழுமையான விவரங்கள் இந்த ஆண்டு முடிவிற்கு முன் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் சியாவோ ஜென்சியாங் தனது உரையின் முடிவில் தெரிவித்தார்.