மலேசியா மற்றும் இந்தோனேசிய பகுதிகளில் தீ விபத்து..! சிங்கப்பூரில் காற்றின் தரம் எப்படி உள்ளது..??
சிங்கப்பூர்: மலேசியாவின் அண்டைப் பகுதிகளில் தொடர்ந்து தீ விபத்துகள் பதிவாகி வருகிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால், சிங்கப்பூரில் புகைமூட்டம் உருவாகும் அபாயம் இருப்பதாக தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) எச்சரித்துள்ளது.
வடக்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் இருந்து வீசும் காற்றின் தொடர்ச்சியான தாக்கம் காரணமாக, அண்டை நாடுகளில் தீ தொடர்ந்து எரிந்தால் அதன் புகை சிங்கப்பூரை நோக்கி நகரக்கூடும் என NEA தெரிவித்துள்ளது.
நேற்று இரவு (30.01.26) NEA தனது ஃபேஸ்புக் பதிவில் வெளியிட்ட செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில், நேற்று பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி மலேசியாவின் ஜோகூர் பகுதியில் மூன்று தீ விபத்துகளும், இந்தோனேசியாவின் ரியாவ் தீவுகளில் ஐந்து தீ விபத்துகளும் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இந்த தீ விபத்துகள் தொடர்ந்து எரிந்தால், சிங்கப்பூரில் புகைமூட்டம் உருவாகக்கூடும் என NEA தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், வார இறுதியில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், புகையின் தாக்கம் ஓரளவு தணிய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
NEA இணையதளத்தில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இன்று (31.01.26) காலை 6 மணி நிலவரப்படி, கிழக்குப் பகுதியில் 24 மணி நேர மாசுபாடு குறியீடு 53 ஆக பதிவாகியுள்ளது. இது மிதமான அளவாகக் கருதப்படுகிறது. மற்ற பகுதிகளில் PSI அளவு 36 முதல் 46 வரை பதிவாகி உள்ளதால் காற்றின் தரம் நல்ல நிலையில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.