சிங்கப்பூரில் செல்லப் பிராணிகளை பாதுகாக்க சட்டத்தை வலுப்படுத்தும் நிலைபாடு..!!
சிங்கப்பூர்: செல்லப்பிராணிகளை வேண்டுமென்றே துன்புறுத்துவதை எதிர்த்து, சிங்கப்பூர் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை இருப்பதாக உள்துறை மற்றும் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கே. சண்முகம் வலியுறுத்தினார்.
சி.என்.ஏ தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், விலங்கு துஷ்பிரயோகத்திற்குப் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்பதை அரசாங்கம் கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்றும், குற்றங்களைச் செய்தவர்கள் தண்டனையை தவிர்க்க அனுமதிக்கப்படக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், இத்தகைய செயல்களை அதிகமாகக் குற்றமாக்குவதால் பொதுமக்கள் மீது தேவையற்ற அழுத்தம் ஏற்படக்கூடும் என்பதால், நியாயமான மற்றும் சமநிலை கொண்ட அணுகுமுறையுடன் கல்வி மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
சட்டங்களை மீறுபவர்கள் ஒரு சிறிய பகுதியே என்றும், பெரும்பாலான செல்லப்பிராணி உரிமையாளர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தவறான புரிதலால் ஏற்பட்ட செயல்களை நேரடியாகக் குற்றமாகக் கருதுவதைவிட, அந்தச் செயல்கள் குற்றமானவையா என்பதை மதிப்பீடு செய்து, தேவையான வழிகாட்டல் வழங்கப்பட வேண்டும் என்றார்.
விலங்குகளை துன்புறுத்தல் தொடர்பான குற்றங்களுக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை அல்லது S$15000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மீண்டும் குற்றம் செய்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது S$30,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
செல்லப் பிராணிகளை பராமரிக்கும் பொறுப்பில் இருந்து தவறினால் 1 ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது $10,000 அபராதம் விரிக்கப்படலாம்.
இந்த தண்டனைகள் தொடர்பான சட்டங்கள் தற்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு, வலுப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
இவை அனைத்தும், விலங்குகளுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்தவும், பொறுப்பான செல்லப்பிராணி பராமரிப்பை ஊக்குவிக்கவும் அரசாங்கம் எடுத்துள்ள முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.