புக்கிட் திமா விரைவுச்சாலையில் பயங்கர விபத்து..!! போக்குவரத்து தாமதம்...!!
சிங்கப்பூர்: புக்கிட் திமா விரைவுச்சாலையில் (BKE) இன்று (ஜூலை 25) காலை 6.55 மணியளவில் ஒரு மோசமான விபத்து ஏற்பட்டது.
இதில் 23 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 23 வயது பயணி ஒருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்து, பான் தீவு விரைவுச்சாலை (PIE) நோக்கிய சிலேத்தார் விரைவுச்சாலை (SLE) வெளியேறும் பகுதி அருகே நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
39 வயதுடைய லாரி ஓட்டுநர் தற்போது விசாரணைக்காக போலீசாருக்கு ஒத்துழைக்கிறார்.
விபத்து நடந்த இடத்தில் மூன்று போலீஸ் வாகனங்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்தது.
ஒரு கனரக லாரி சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்ததுடன், அதன் பின்னால் நீல நிற போலீஸ் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில் சாலையில் முழுவதும் இரத்தக்கரை நிரம்பி இருப்பதை காணலாம்.
இந்த விபத்து காரணமாக உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் காலை 8:40 மணிக்கு வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், இந்த சாவடி வழியாக நாட்டுக்குள் நுழையும் வாகனங்கள் தாமதத்தை எதிர்பார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.