சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் போல்டரின் பிரதான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததாக வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் (HDB) மற்றும் பொதுப் பயன்பாட்டு வாரியம் (PUB) இன்று (08.09.25) அறிவித்தன. புலாவ் டெகோங்கில் சுமார் 800 ஹெக்டேர் நிலத்தைச் சேர்க்கும் இந்தத் திட்டம், நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான பொறியியல் மைல்கல்லாகும்.
போல்டர் என்றால் என்ன?
போல்டர் என்பது கடலில் இருந்து நிலத்தை மீட்டெடுத்து, அணைகள் மற்றும் வடிகால் அமைப்புகளின் மூலம் பாதுகாப்புடன் பயன்படுத்தக்கூடியதாக மாற்றும் தொழில்நுட்பம். பாரம்பரிய நில மீட்புடன் ஒப்பிடும்போது, போல்டர் குறைவான மணல் மற்றும் மண் தேவைப்படுவதால் செலவு குறைவாகும்.
புலாவ் டெகோங்கில் போல்டர் ஏன்..?
உலகளவில் உயர்ந்து வரும் கடல் மட்டங்களை சமாளிக்க சிங்கப்பூர் 2016இல் போல்டர் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. 2019இல் அப்போதைய பிரதமர் லீ சியான் லூங், கிழக்கு கடற்கரை பாதுகாப்பு திட்டங்களுக்கு அனுபவம் பெற புலாவ் டெகோங்க் போல்டர் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவித்தார்.
கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் பத்து கிலோமீட்டர் நீளமான கடற்கரை அணைக்கட்டுகள், 116 ஹெக்டேர் பரப்பளவுள்ள மழைநீர் சேகரிப்பு குளம், 45 கிலோமீட்டர் வடிகால் வலையமைப்பு, இரண்டு பம்ப் ஹவுஸ்கள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அணைக்கட்டுகள் சராசரி கடல் மட்டத்திலிருந்து ஆறு மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
அவசரநிலைக்கு முன்னெச்சரிக்கை வெள்ளம் போன்ற அவசர சூழ்நிலைகளில் உடனடியாக பொது எச்சரிக்கை அமைப்பு செயல்படுத்தப்படும். பம்புகள் மற்றும் மின் உற்பத்தி உபகரணங்களுக்கு மாற்று வசதிகளும் ஏற்பாடாகியுள்ளன.
பயன்பாடு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் புலாவ் டெகோங்க் போல்டர், சிங்கப்பூர் ஆயுதப்படைகளுக்கு புதிய பயிற்சி மையமாக பயன்படும். இதன் மூலம் பிரதான தீவில் குடியிருப்பு மற்றும் பிற மேம்பாட்டு பணிகளுக்கான இடம் விடுவிக்கப்படும்.
HDB மற்றும் PUB, டெகோங்க் போல்டர் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் சிங்கப்பூரின் பிற பகுதிகளிலும் போல்டர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளன.