சாதனை...!!! தடகளத்தில் இரட்டை பதக்கம் வென்றார் சிங்கப்பூரின் குயின்..!!!
தாய்லாந்து தலைநகர் பேங்க்காங்கில் நேற்று(13.12.25) நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தி பெரோரா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம், இந்தப் போட்டிகளில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தங்கம் வென்று இரட்டை சாம்பியனாக அவர் உருவெடுத்துள்ளார்.
சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் தனது ஃபேஸ்புக் பதிவில்,தொடர்ச்சியாக இரண்டு தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் இரண்டிலும் தங்கப் பதக்கங்களை வென்றுள்ள சாந்தி பெரோராவின் சாதனையை பாராட்டியுள்ளார். சாந்தி பெரோரா மீண்டும் இதை செய்து காட்டியுள்ளார் என குறிப்பிட்டு, அவரை “ராணி” என்று வர்ணித்துள்ளார்.
அதே பதிவில், இந்தப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்ட சிங்கப்பூரின் மற்ற தடகள மற்றும் களப் போட்டி வீரர்களையும் ஜனாதிபதி தர்மன் பாராட்டினார்.
ஆண்களுக்கான 200 மீட்டர் இறுதிப் போட்டியில் மார்க் லூயிஸ் தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கம் வென்றதை அவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம், சிங்கப்பூரின் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் அவர் புதிய சாதனையாளராகத் திகழ்கிறார் என்றும் கூறினார்.
மேலும், 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் போட்டிகளில் சிங்கப்பூருக்காக உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற கான் கையனையும் ஜனாதிபதி பாராட்டினார். அதேபோல், மும்முறை தாண்டுதல் போட்டியில் 16.09 மீட்டர் தாவி, 16 ஆண்டுகளாக நிலைத்திருந்த தேசிய சாதனையை முறியடித்து வெண்கலப் பதக்கம் வென்ற லீ ஜின் நிகேவுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த வெற்றிகளை குறிப்பிடும் வகையில், “சிங்கப்பூரில் தடகளம் தற்போது செழித்து வருகிறது” என ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.