சிங்கப்பூரின் ஈசூன் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 24) இரவு நிகழ்ந்த தீ விபத்தில் தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்பாகவே, எந்த ஒரு பயமும் இன்றி எரியும் வீட்டிற்குள் புகுந்து தீயை அணைத்த 2 நபர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்த விபத்தானது ஜூலை 24ஆம் தேதி அன்று இரவு சுமார் 7:25 மணி அளவில் ஈசூன் அவென்யூ 6 -ல் உள்ள புளோக் 461A, HDB அடுக்குமாடிக் குடியிருப்பின் 4வது மாடியில் நிகழ்ந்தது.
படுக்கை அறையில் இருந்த மெத்தை விரிப்பில் ஏற்பட்ட தீ காரணமாக விபத்து ஏற்பட்டு, தீ வீடு முழுவதும் வேகமாக பரவி உள்ளது.
விபத்து நடந்த வீட்டின் அண்டை வீட்டைச் சேர்ந்த ஹஸ்ரில்(வயது 20) மற்றும் அவரது அண்ணன் ஹஸ்ரிக்(வயது 25) ஆகிய இரு சகோதரர்களும் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, தீ விபத்து குறித்த அபாயக்குரலை கேட்டுள்ளனர்.
உடனடியாக அவர்கள் தங்களின் ஆடைகளால் மூக்கு மற்றும் வாயை மூடிக்கொண்டு, காரிடாரில் இருந்த தண்ணீர்க் குழாய்களை இழுத்துக் கொண்டு துணிச்சலாக எரியும் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே, அவர்கள் நீரை பீச்சு அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்
சகோதரர்களின் இந்த துணிச்சலான செயலைப் பாராட்டி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர், அவர்களுக்கு AsiaOne செய்தி நிறுவனத்தின்படி, ‘SCDF சமூக உயிர்க்காப்பாளர் விருது’ வழங்கி சிறப்பிக்கவுள்ளது.
அவர்களின் விரைவான மற்றும் துணிச்சலால் இந்த நடவடிக்கையால் விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்பதையும் SCDF உறுதிப்படுத்தி உள்ளது.
அபாயகரமான சூழலிலும் அண்டை வீட்டாரருக்கு உதவ முன்வந்த இந்த சகோதரர்களின் செயலைக் காட்டும் காணொளி தற்போது சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது.