சிங்கப்பூரில் வேலை செய்து வந்த பாண்டி (32), 15 நாட்களுக்கு முன் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் T.மேட்டுப்பட்டிக்கு திரும்பிய நிலையில், தனது சகோதரியின் கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப சூழ்நிலை காரணமாக பாண்டி, தனது முதல் சகோதரியின் கணவரான சக்திவேலுக்கு ரூ.13 லட்சம் கடனாக வழங்கியதாக கூறப்படுகிறது. இரண்டாவது சகோதரியின் திருமணத்திற்காக அந்த பணத்தை திரும்பக் கேட்டதில், இருவருக்கும் இடையே கடும் விரோதம் உருவாகி கடந்த இரண்டு ஆண்டுகளாக பேசாமல் இருந்துள்ளனர்.
மேலும் சக்திவேலின் அண்ணன் மனைவிக்கும் பாண்டிக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சக்திவேல் பாண்டியை கண்டித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இருந்த முன்விரோதம் மேலும் தீவிரமடைந்த நிலையில், பாண்டி ஊருக்கு வந்த தகவலை அறிந்த சக்திவேல், சிங்கப்பூரிலிருந்து ஊருக்கு வந்து அவரை சமரசம் பேசுவதாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு பாண்டி காணாமல் போனார்.
பின்னர், பொன்னமராவதி அருகே இடையன் பாறை பகுதியில் ஆடையின்றி, பலத்த காயங்களுடன் கிடந்த ஆண் சடலம் பாண்டியுடையது என உறுதி செய்யப்பட்டது. இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.