20 ஆண்டு சட்டப் போராட்டத்தை வென்ற இங்கிலாந்து பெண்..!! இழப்பீடாக கிடைத்த பெருந்தொகை..!!
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர், 20 ஆண்டுகால சட்டப் போராட்டத்துக்குப் பின் தன் கணவரிடம் இருந்து நியாயமான இழப்பீடாக, ரூ.85 கோடி பெற்றிருக்கிறார்.
வர்ஷா கோஹில் என்ற அந்தப் பெண், கடந்த 2002-ம் ஆண்டு தன்னுடைய கணவர் பத்ரேஷ் கோஹிலிடம் இருந்து விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இருவருக்கும் 3 குழந்தைகள் இருந்த நிலையில், அப்போதைய நிதி ஆதாரங்களின் அடிப்படையில் வர்ஷா கோஹிலுக்கு சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் பவுண்டுகள் (ரூ.3.5 கோடி) மற்றும் ஒரு கார் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், தன்னுடைய கணவர் அவருடைய சொத்து விவரங்களை முறையாக கணக்கில் காட்டவில்லை என வர்ஷா வாதிட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு பத்ரேஷ் கோஹில், நைஜீரிய முன்னாள் கவர்னர் ஜேம்ஸ் இபோரியின் கூட்டாளிகள் தொடர்பான பண மோசடி விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக சிக்கினார். அந்த வழக்கில், ஆவணங்கள் திருத்தம், பண மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக பத்ரேஷுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பண மோசடி விவகாரத்துக்கு பிறகுதான், கணவர் பத்ரேஷ் மறைத்து வைத்திருந்த பல கோடி மதிப்புள்ள சொத்துகள் விவரம் வர்ஷாவுக்கு தெரியவந்தது. எனவே, அதற்கேற்ப தனக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று கோர்ட்டில் முறையிட்டார்.
அதைத் தொடர்ந்து, ஐகோர்ட்டு நீதிபதி வில்லியம்ஸ், பத்ரேஷின் சிக்கலான சொத்து விவரங்களை ஆய்வு செய்து, திருமண உறவில் இருந்து பிரிந்த அவரது மனைவி வர்ஷாவுக்கு 6.66 மில்லியன் பவுண்டுகள் (ரூ.85 கோடி) மதிப்புள்ள சட்டப்பூர்வமான சொத்துகளை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.