இந்த ஆண்டு ரமலான் சந்தையில் இடம் பெறும் மாற்றங்கள் என்ன தெரியுமா..???
சிங்கப்பூர்:காம்போங் க்லாம் பகுதியில் நடைபெறவுள்ள இந்த ஆண்டின் ரமலான் சந்தை, சில மாற்றங்களுடன் மீண்டும் மக்களை கவரத் தயாராக உள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சுமார் 15 விழுக்காடு குறைவாக, 100 கடைகள் மட்டுமே சந்தையில் இடம்பெறுகின்றன. கார்களை நிறுத்துவதற்கான கூடுதல் வசதியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறு வியாபாரிகள் மற்றும் புதிய வணிகர்களுக்கு ஆதரவாக, கடைகளுக்கான வாடகை கட்டணம் இந்த ஆண்டு சுமார் S$1000 வரை குறைக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரமலான் சந்தையில் பங்கேற்பதற்கான செலவுச் சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பாக் தாத் ஸ்ட்ரீட்டில் அமைக்கப்படவிருந்த சுமார் 30 கடைகள், பாதுகாப்பு மற்றும் சாலை மூடல் தொடர்பான செலவுகளை குறைக்கும் வகையில், சுல்தான் கேட் பார்க்கிற்கு இடமாற்றம் செய்யப்படுகின்றன.
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிப்ரவரி 11ஆம் தேதி தொடங்கும் இந்த ரமலான் சந்தை, மார்ச் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பாரம்பரிய மலாய் உணவுகள், ரமலான் சிறப்பு ஸ்நாக்ஸ், பானங்கள், ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் ஒரே இடத்தில் கிடைப்பதால், இந்த சந்தை உள்ளூர் மக்களையும் சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.