பயோ லேபார் திட்டத்தில் பசுமை பாதுகாப்பு கோரிக்கை..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 2030களில் தொடங்கவுள்ள பயோ லேபார் ஆகாயப்படைத் தள மறுமேம்பாட்டுத் திட்டத்தை முன்னிட்டு, அந்தப் பகுதியின் தாவரங்களில் மூன்றில் ஒரு பங்கை பசுமைவெளியாகப் பாதுகாக்க வேண்டும் என சிங்கப்பூர் இயற்கை ஆர்வலர் சங்கம் பரிந்துரைத்துள்ளது.
மொத்தம் 1,271 ஹெக்டர் பரப்பளவில் நடைபெறவுள்ள இந்த மறுமேம்பாட்டில், சுமார் 389 ஹெக்டர் நிலத்தை காடு, பூங்கா மற்றும் நீர்நிலைகளாகத் தக்கவைக்க வேண்டும் என்ற திட்டத்தை சங்கம் நகர மறுசீரமைப்பு ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. சங்கத்தின் மதிப்பீட்டின்படி, இதில் 805 ஹெக்டர் பரப்பளவு பல்லுயிர்ச்சூழல் முக்கியத்துவம் கொண்ட பகுதிகளாக உள்ளது.
வடகிழக்கு சிங்கப்பூரில் மீதமுள்ள அரிய இயற்கை வனப்பகுதிகளில் ஒன்றாக பயோ லேபார் பகுதி விளங்குகிறது என சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டோனி ஓ’டெம்ப்சே தெரிவித்துள்ளார். மறுமேம்பாடு காரணமாக பெருமளவு வாழிட இழப்பு ஏற்படக்கூடும் என்பதால், வனவிலங்குகளின் வாழிட இணைப்பை பாதுகாக்க தணிப்பு நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பயோ லேபார் ஆகாயப்படைத் தளத்தின் பசுமைவெளி, தெம்பனிஸ் சாலை முதல் கோனி தீவு மற்றும் பிடோக் நீர்த்தேக்கப் பூங்கா வரை நீளும் பசுமைப்பாதைகளுடன் இணைந்து, பூர்வீக வனவிலங்குகளுக்கான முக்கிய வாழிடமாக செயல்படுகிறது என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், சிராங்கூன் ஆறு மற்றும் பயோ லேபார் ஆகாயப்படைத் தளம் தொடர்பான இயற்கை சங்கத்தின் பரிந்துரைகள் கிடைத்துள்ளன என்றும், அவை தற்போது மதிப்பீடு செய்யப்படுகின்றன என்றும் நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.