Boon Lay பகுதியில் பயங்கர விபத்து..!! 18 பேர் மருத்துவமனையில் அனுமதி.!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பூன் லே பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 18 பேர் காயமடைந்து மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விபத்தில் லாரி ஒன்று கவிழ்ந்ததுடன், அதன் ஓட்டுநர் வாகனத்திற்குள் சிக்கிக்கொண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.
இந்த விபத்து ஆகஸ்ட் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை சுமார் 7 மணியளவில், ஜாலான் துகாங் மற்றும் துகாங் இன்னோவேஷன் டிரைவ் சந்திப்பில் ஏற்பட்டது.
விபத்து தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், அதில் வெள்ளை நிற லாரி ஒன்று சாலையின் நடுப்பகுதியில் உள்ள தடுப்புப் பகுதியில் கவிழ்ந்து கிடப்பது காணப்பட்டது. மேலும், சாலையில் சிதறிக் கிடந்த பொருட்களை சிலர் அகற்றும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
ம்பவ இடத்திற்கு SCDF அதிகாரிகள் விரைந்து சென்றபோது, லாரியின் ஓட்டுநர் இருக்கையில் ஒருவர் சிக்கியிருந்தது கண்டறியப்பட்டது.
அவரை மீட்க, அதிகாரிகள் ஹைட்ராலிக் மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தினர். அதன் மூலம் ஓட்டுநர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
இந்த விபத்தில் மொத்தம் 18 பேர் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
13 பேர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும், 5 பேர் ங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக SCDF தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பூன் லே பகுதியில் காலை நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து தொடர்பான மேலதிக விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் நிலையில், சம்பவத்தின் முழுமையான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.