சிங்கப்பூரில் 3 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட மெத்தனால் உரிமம்..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் (MPA) அடுத்த ஆண்டு முதல் மெத்தனாலை கடல் எரிபொருளாக வழங்க அனுமதிக்கும் வகையில் மூன்று நிறுவனங்களுக்கு உரிமங்களை வழங்கியுள்ளது. இது சிங்கப்பூரின் பசுமை எரிபொருள் முயற்சிகளில் ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
உரிமம் பெற்ற நிறுவனங்கள் குளோபல் எனர்ஜி டிரேடிங், கோல்டன் ஐலேண்ட் மற்றும் சீனா பெட்ரோலியம் இன்டர்நேஷனல் (சிங்கப்பூர்) கோ. லிமிடெட் ஆகியவையாகும்.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மெத்தனால் எரிபொருள் விநியோக உரிமைகளுக்கான விண்ணப்பங்களைத் திறந்தபோது, மொத்தம் 13 நிறுவனங்கள் விண்ணப்பித்தன.விரிவான மதிப்பீட்டிற்குப் பிறகு,கடல்சார் அதிகாரிகள் இந்த மூன்று நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்தனர்.
மெத்தனால் கடல் எரிபொருள் விநியோக உரிமம் 2026 ஜனவரி 1 முதல் 2030 டிசம்பர் 31 வரை ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். ஆனால் நிறுவனங்கள் அனைத்தும் உரிம நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று MPA தெரிவித்துள்ளது.
அதிகாரிகள், இந்த உரிமக் கட்டமைப்பை செயல்பாட்டு அனுபவம், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் சர்வதேச தரநிலைகளைப் பொருத்து தொடர்ந்து மதிப்பாய்வு செய்து, அதை வலுவானதும், உலகளாவிய போக்குகளுக்கு இணையானதுமாக வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.