சிங்கப்பூர்:சிங்கப்பூரின் ஜூரோங் தீவில் பசுமை எரிசக்தி அடிப்படையில் இயங்கும் புதிய தரவு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்த தகவலை அதிகாரிகள் நேற்று(24.11.25)அறிவித்தனர்.
இதில் சுமார் 20 ஹெக்டேர் பரப்பளவில், 25 கால்பந்துத் திடல்களுக்கு இணையான அளவில் — கட்டப்படும் புதிய தரவு நிலைய பூங்கா குறைந்த அளவு கரிம வெளியீடு கொண்டதாக இருக்கும். இது சூரிய சக்தி உள்ளிட்ட பசுமை எரிசக்தி வழிமுறைகளைக் கொண்டு செயல்படவும், செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளுக்குத் தேவையான மேம்பட்ட கணினி அமைப்புகளையும் கொண்டிருக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய மையம், குறைந்த கரிம பயன்பாட்டுக்கான தரவு நிலைய பகுதிக்குள் அமைக்கப்படவுள்ளது. இதற்கான ஆய்வை ஜேடிசி (Jurong Town Corporation) மற்றும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (NUS) இணைந்து அடுத்த ஆண்டு தொடங்கவிருக்கின்றன.
ஜூரோங் தீவின் 25வது ஆண்டு நிறைவையொட்டி, ஜேடிசி மற்றும் பொருளியல் வளர்ச்சிக் கழகம் ஆறு புதிய கூட்டணிகளை அறிவித்தன. அவற்றில் ஜேடிசி–NUS பங்காளித்துவமும் அடங்கும். நிகழ்வில் பேசிய துணைப் பிரதமரும் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சருமான கான் கிம் யோங், “முன்பு உற்பத்தி அளவு மற்றும் செலவு மையமாக இருந்த எரிசக்தி மற்றும் ரசாயனத் துறை, இப்போது பசுமை தொழில்நுட்பம், குறைந்த கார்பன் பயன்பாடு மற்றும் தரமான உற்பத்தியை நோக்கி மாறி வருகிறது,” என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும், ஜூரோங் தீவு தொடர்ச்சியான மாற்றத்தினால் எதிர்காலத்திலும் தொழில் துறையில் போட்டித்தன்மையுடன் திகழும் என தெரிவித்தார்.
தரவு நிலையங்கள், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சேவைகளின் முதுகெலும்பாக விளங்குகின்றன. புதிய பசுமை எரிசக்தி மையம், இதனை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் முன்னெடுக்க முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.