அட.. பிறந்தநாள் கொண்டாட்டம் இப்படியா ஆகணும்..!! என்ன நடந்தது..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மெரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் நேற்று (03.11.25) பெரிய அளவிலான தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பல விருந்தினர்கள் தங்கள் அறை சாவியைப் பெற நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர்.சிலர் ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை லாபியில் தங்கியிருந்தனர்.
மேலும் மாலை நேரம் வரை வரவேற்பு மையத்தில் மக்கள் நீண்ட வரிசைகள் காத்திருந்தனர். ஹோட்டல் ஊழியர்கள் கணினி அமைப்பை மீட்டமைக்க முயற்சித்தனர்.இதற்காக பாதுகாப்பு குழுவினரும் உதவினர். சில விருந்தினர்கள் சோர்வாக இருந்ததால் லாபி நாற்காலிகளில் ஓய்வெடுத்தனர்.அவர்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஜப்பானில் இருந்து வந்த குடும்பம் ஒன்று தனது எட்டு வயது மகளின் பிறந்தநாளைக் கொண்டாட ஹோட்டல் அறை முன்பதிவு செய்திருந்தது. ஆனால் அவர்கள் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை அறை சாவிக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. “இது ஓய்வெடுக்கும் இடமாக இருக்க வேண்டியது.ஆனால் என் மகளின் பிறந்தநாளை முழுமையாகக் கெடுத்துவிட்டது,” எனத் தந்தை கூறினார்.
அறை கிடைத்தாலும் பிரச்சனை ஓயவில்லை..
ஒரு உள்ளூர் விருந்தினர் மூன்று மணி நேரம் காத்திருந்து அறையின் சாவியை பெற்றபோதும், டிவி மற்றும் ஏர் கண்டிஷனர் வேலை செய்யவில்லை என்று புகார் தெரிவித்தார். “இது போன்ற பெரிய ஹோட்டலில் இத்தகைய பிரச்சனை ஏன் ஏற்படுகிறது என்பது புரியவில்லை,” என அவர் கூறினார்.
மெரினா பே சாண்ட்ஸ் ஹோட்டல் செய்தியாளர்களுக்கு அளித்த பதிலில், “நெட்வொர்க் கோளாறு பிரச்சினையால் செக்-இன் மற்றும் உறுப்பினர் புள்ளி மீட்பு போன்ற சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன. ஆனால் தற்போது அனைத்து பிரச்சினைகளும் மீட்டமைக்கப்பட்டுள்ளது. விருந்தினர்களின் பொறுமைக்கும் புரிதலுக்கும் நன்றி” எனத் தெரிவித்தது.