பெட்ரோல் விலை ஏற்றம்…!! ஓட்டுநர்கள் வருமானம் குறையுமா..?
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் டாக்ஸி ஓட்டுநர்கள் பயன்படுத்தும் எரிபொருள் விலை இன்று(05.03.26)முதல் உயர்த்தப்பட இருப்பதாக டாக்ஸி நிறுவனமான ComfortDelGro அறிவித்துள்ளது. உலகளாவிய எண்ணெய் விலை உயர்வை காரணமாகக் கொண்டு இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பெற்ற தேசிய டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம், எரிபொருள் விலை உயர்வு ஓட்டுநர்களின் வருமானத்தை பாதிக்கக்கூடும் என்ற கவலையை வெளியிட்டுள்ளது. இதனால் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தில் கூடுதல் அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து, ஓட்டுநர்களுக்கு ஏற்படும் தாக்கத்தை குறைக்கும் வகையில் ComfortDelGro நிறுவனத்துடன் சங்கம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அதன் பின்னர் விலையை ஒரே நேரத்தில் உயர்த்தாமல், படிப்படியாக உயர்த்தும் முடிவை நிறுவனம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மார்ச் 5ஆம் தேதி முதல் லிட்டருக்கு 5 காசுகள் உயர்த்தப்பட்டு, பெட்ரோல் விலை லிட்டருக்கு S$1.93 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரத்திற்குப் பிறகு இரண்டாவது கட்ட விலை மாற்றமும் அமல்படுத்தப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளதாகவும், இது டாக்ஸி ஓட்டுநர்களின் செலவுகளை நேரடியாக பாதிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஓட்டுநர்களின் சுமையை குறைக்க மானியம் உள்ளிட்ட ஆதரவு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.