செயற்கை நுண்ணறிவு புரட்சிக்கு வழிகாட்டும் சிங்கப்பூர்..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், அனைத்து நாடுகளும் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியை உணர்ச்சிவசப்படாமல், பகுத்தறிவுடன் அணுகி அதன் பொறுப்பான பயன்பாடு மற்றும் நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும் என்று ஜி20 உச்சி மாநாட்டில் அழைப்பு விடுத்தார்.
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பேசும் போது பிரதமர் வோங், AI இன் புதிய சகாப்தத்தில் அரசுகள் தங்கள் பணியாளர்களை மாற்றத்திற்கு தயார் செய்ய வேண்டும்.இதன் மூலம் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியும் தரமான வேலைவாய்ப்புகளும் உருவாகும் என கூறினார்.
அவர் மேலும், அரசுகள் AI விளம்பரத்தால் மயங்கிவிடாமல், அதன் நன்மைகளை பொறுப்புடன் பயன்படுத்தும் கொள்கைகள் வகுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சிங்கப்பூரை எடுத்துக்காட்டாகக் கூறிய அவர், நாட்டின் பொதுத்துறையில் AI பயன்பாட்டால் செயல்முறைகள் எளிதாக்கப்பட்டு, ஊழியர்கள் உயர்ந்த மதிப்புடைய பணிகளில் கவனம் செலுத்த முடிகிறது என்றார். மேலும், உள்ளூர் வணிகங்களும் தங்கள் செயல்பாடுகளை மறுசீரமைக்க AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.
உலகளாவிய அளவில் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார சவால்களை சமாளிக்க AI முக்கிய பங்கு வகிக்க முடியும் என்றும்,அதற்காக அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் வோங் அழைப்பு விடுத்தார்.