சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பணிப்பெண்ணை நிறுவன நிர்வாகியாக பணியமர்த்த உதவிய இடைத்தரகர் ஒருவருக்கு நான்கு வார சிறைத்தண்டனையும் $2,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
42 வயதான பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த வில்லரோசா மா லூர்து மனங்காயா, பணி அனுமதி விண்ணப்பத்தில் தவறான தகவல் அளித்ததுடன், வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து சட்ட வரம்பை மீறி ஏஜென்சி கட்டணம் வசூலித்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் தண்டனை பரிசீலனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
வழக்கு விவரங்களின்படி, பிரின்ஸ் எம்போரியத்தின் 50 வயதான இயக்குநரான ஷெஹ்சாத் ஷம்சுதீன் கரிமி,ஜனவரி 2024இல் தனது நிறுவனத்திற்கு உள்ளூர் நிர்வாக ஊழியர்கள் பொருந்தவில்லை என கருதி வில்லரோசாவிடம் உதவி கேட்டார்.
மனிதவள அமைச்சகம் இரு முறை பணி அனுமதி விண்ணப்பத்தை நிராகரித்ததைத் தொடர்ந்து, இருவரும் வெளிநாட்டு வீட்டு உதவியாளராக விண்ணப்பித்து, உண்மையில் நிறுவன நிர்வாகப் பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டனர்.
ஜூலை 2024இல், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பாரிகிட் கிறிஸ்டி ஆன் அபாபோ அறிமுகப்படுத்தப்பட்டார். அரட்டை குழுவில் நிர்வாகப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு, அவர் பணிப்பெண்ணாக அல்லாமல் அலுவலகப் பணியில் ஈடுபடுவார் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தது.
செப்டம்பர் 2, 2024 அன்று, நிறுவன அனுமதி இல்லாமல், பாரிகிட்டை வீட்டில் பணிப்பெண்ணாக நியமித்ததாகக் கூறும் ஆவணத்தில் கையெழுத்திடப்பட்டது. இந்த மோசடி சுமார் இரண்டரை மாதங்கள் நீடித்தது.
பணி அனுமதி மற்றும் வேலை ஏற்பாடுகளுக்காக வில்லரோசா $3,200 வசூலித்ததாகவும், இது சட்டப்படி அனுமதிக்கப்பட்ட $1,500 வரம்பை விட அதிகம் என்றும் விசாரணையில் தெரியவந்தது.
டிசம்பர் 2024இல் மனிதவள அமைச்சக விசாரணையின் போது அவர் தவறான தகவல் வழங்கியதும் உறுதி செய்யப்பட்டது.
இதே வழக்கில் பாரிகிட்டுக்கு மூன்று வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஷெஹ்சாத் ஷம்சுதீன் கரிமியின் வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.