GIC-யின் மூன்றாம் தரப்பு முகவருக்கு தென் கொரியாவில் அபராதம்..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் இறையாண்மை செல்வ நிதியமான GIC-யின் மூன்றாம் தரப்பு முகவருக்கு,தென் கொரிய ஒழுங்குமுறை அதிகாரிகள் 120.6 மில்லியன் வோன்(தோராயமாக S$105,000) அபராதம் விதித்துள்ளனர். இது சரியான விலைப்பட்டியல் இல்லாமல் குறுகிய விற்பனையில் ஈடுபட்டதன் காரணமாக விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் 2022 மார்ச் மாதத்தில் நடந்ததாக கொரியா செக்யூரிட்டீஸ் அண்ட் ஃபியூச்சர்ஸ் கமிஷன் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அந்த நேரத்தில், GIC-யின் மூன்றாம் தரப்பு முகவர் ஒருவர்,ஹோட்டல் ஷில்லா என்ற சொகுசு ஹோட்டல் நிறுவனத்தின் 8,415 பங்குகளை, முன் கொள்முதல் இல்லாமல் குறுகிய விற்பனை செய்ய ஆர்டர் வெளியிட்டுள்ளார். அந்த பரிவர்த்தனையின் மதிப்பு 666.1 மில்லியன் வோன் (தோராயமாக S$580,700)ஆகும்.
ஆனால், அந்த பங்குகள் முகவர் நிர்வகித்த கணக்குகளில் அந்த நேரத்தில் இல்லை என்பது பின்னர் தெரியவந்தது.இதனால் தீர்வு தேதிக்குள் பங்குகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக CNA எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த GIC, இது திட்டமிட்ட செயல் அல்ல என்றும், மூன்றாம் தரப்பு முகவரின் செயல்பாட்டுத் தவறால் ஏற்பட்ட பிழை என்றும் விளக்கமளித்தது. அந்த தவறு GIC உடனான ஒப்பந்த விதிகளையும் மீறியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், தென் கொரிய ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு இணங்கத் தவறியதற்கான முழுப் பொறுப்பையும் முகவர் ஏற்றுக்கொண்டதாக GIC தெரிவித்துள்ளது. அபராதத் தொகையின் முழு செலவையும் அந்த முகவரே செலுத்தியதாகவும் கூறப்பட்டது.
வெளிநாட்டு பொது நிறுவனமாக GIC நியாயமற்ற பரிவர்த்தனைகளில் ஈடுபடாது என்பதைக் கருத்தில் கொண்டு, ஒழுங்குமுறை ஆணையம் அபராதத் தொகையை பாதியாகக் குறைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இனிமேல் இத்தகைய செயல்பாட்டுத் தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க, அனைத்து மூன்றாம் தரப்பு முகவர்களின் நடைமுறைகளையும் தொடர்ந்து மதிப்பாய்வு செய்து கண்காணிக்க உள்ளதாக GIC தெரிவித்துள்ளது. தென் கொரியா GIC-க்கு முக்கிய முதலீட்டு சந்தையாக இருப்பதாகவும் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.