பெண் குரலில் பேசி ரூ.29 லட்சம் மோசடி..!! திருச்சி இன்ஜினியர் கைது!

பெண் குரலில் பேசி ரூ.29 லட்சம் மோசடி..!! திருச்சி இன்ஜினியர் கைது!

தேனி: சமூக வலைதளத்தில் பெண் பெயரில் போலி கணக்கு உருவாக்கி, டிஜிட்டல் தங்க முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ரூ.29 லட்சம் மோசடி செய்த வழக்கில், திருச்சியைச் சேர்ந்த என்ஜினியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (32) என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு சமூக வலைதளமான Facebook-ல் ‘ஹேமலதா ஸ்வேதா’ என்ற பெயரில் ஒருவர் அறிமுகமானார்.

அந்த நபர், டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என நம்பவைத்ததாக கூறப்படுகிறது.


இதை நம்பிய முத்துக்குமார், பல்வேறு தவணைகளில் ரூ.23.50 லட்சம் முதலீடு செய்துள்ளார்.

பின்னர், மேலும் ரூ.5.50 லட்சம் கொடுத்தால் முதலீட்டு தொகையையும் லாபத்தையும் பெறலாம் என கூறியதால், அந்தத் தொகையையும் வழங்கியுள்ளார்.

 

ஆனால் அதன்பிறகும் பணத்தை திரும்பப் பெற முடியாததால், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த முத்துக்குமார் தேனி சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், மோசடியில் தொடர்புடையவராக திருச்சியைச் சேர்ந்த நிர்மல்குமார் (21) என்பவர் கைது செய்யப்பட்டார்.

 

விசாரணையில், அவர் சைபர் மோசடியில் ஈடுபடும் நிறுவனத்திற்கு தனது வங்கிக் கணக்கை பயன்படுத்த அனுமதித்ததுடன், ஆன்லைன் மூலம் மோசடி செய்வது குறித்து பயிற்சியும் பெற்றிருந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை கண்டறியவும், மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்கவும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.